Sunday 30 December 2012

அவர்கள் அப்படி(யே)த்தான் இருக்கிறார்கள்.....!!!

                                      மேற்கு அடிவானை நோக்கி  சூரியன் நகரத்தொடங்கிய மாலைப்பொழுது. கண்ணைக்கூசும் மெல்லிய மஞ்சள் ஒளியால்  சுவர்கள், மரங்கள் என  வெளிச்சம்படும் இடங்கள் எல்லாம் மஞ்சளாக  மாறி இருந்தன. முன்வாசல் படிக்கட்டில் இருந்து   வீதியையே பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் மனம், அடிக்கடி நிறம்மாறி அங்கும் இங்கும் அலையும்  அடிவான்மேகங்களைப்  போல உணர்வுகளை மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தது.  "விடியக்காத்தல வெளிக்கிட்டதாக அதுகள் அடிச்சு சொன்னதுகள், இன்னும் இங்கை வரவில்லையே எப்படியும் இந்த நேரம் வந்திருக்கணுமே, என்ன ஆச்சோ, வந்தவாகனத்தில ஏதும் பிரச்சனையோ என்னண்டு தெரியேல்லையே, பிள்ளையின்ர போனும் வேலை செய்யுதில்லை, வான்காரனும் யார் என்று தெரியவில்லை" என புறுபுறுத்தபடி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதறிக்கிடந்தாள் செல்லம்மா. "கடவுளே தோட்டத்துக்கு போன மனுஷன் வரமுதல் வந்தாள் எண்டா தப்பினேன், இல்லாட்டி உந்த மனிசன் இண்டைக்கு சிப்பிலியாட்டித்தான் விடும்"  என கடவுளையும்  நோந்துகொண்டிருந்தவள்,  தூரத்தில் வாகனத்தின் இரைச்சல் கேட்டதும் அந்தரப்பட்டு வாசல் கேற்றை நோக்கி ஓடினாள். கோவிலடி முடக்கால் திரும்பி  வரும் வானைக்கண்டவுடன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள் செல்லம்மா.
                                       

Sunday 23 December 2012

இனியாவது சொல்லிவிடு.

மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ
வண்ணமும் வாசமும் தான் 
நாளுக்குநாள் மாறிக்கொண்டன.
நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் 
மலர்தலை தடுக்கவா முடியும். 

உன் விழிகள்  
ஏணியாகவும் இருந்தது _எனை 
தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது.

சிரித்தேன்.
கடந்தும் திரும்பி பார்த்தாய்.
விரும்பித்தானே பார்த்தாய்?

முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.

பகிர்ந்த சில வார்த்தைகளில்
பொதிந்திருக்குமோ  என்றெண்ணி, 
பகுத்தறிந்து அதுவா இதுவா 
என்றங்கலாய்த்தல்லவா_என் 
அனேக அந்திகள் கலைந்தது. 

மாரடிக்கும் பெண்(டு)கள் கூட 
ஓய்ந்ததுண்டு_உனை 
தேடிதிரிந்த நான்?

எரிகல் விழுகையிலும் 
கல் எறிகையிலும் 
உன்னைத்தான் நினைக்கிறேன்._மறுநாள் 
என்ன நினைத்திருப்பாய்.

எப்பவாது உன்வீட்டு நாய் _உனை 
கொஞ்சி இருக்குமே!
கலைத்த போதும் அது கூட 
கடிக்கவில்லையே !!

சாத்துப்படி இல்லாத 
விக்கிரகம் நீ 
சரிந்தும் படுக்கவிடாத 
சாமக்கோழியும் நீ.

தவறியொருமுறை 
கண்ட கழுத்துகீழ் மச்சம்_இன்னும் 
கண்டத்து சனியாய் வதைக்குது.
எனை மீறி சிலநேரம் 
விழி தேடிப்போகுது.

தாடியை தடவியபடியே _உனை 
நினைப்பது சுகம்,
தனியே கிடந்தது 
சிரிப்பது அதிலும் சுகம்.

நீ எரிகிறாய் 
நான் புகைகிறேன் 
நெருப்பும் புகையும் 
ஒரே  இடத்தில் இருக்கவேண்டும்.

அறுகருசியோ 
வாய்க்கருசியோ_அருகில் 
நீ இருந்தால் காணும்.

இந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது
யுன் இதழ் வடித்த நீரா?
என் கண்ணிதல் வடித்த துளியா?

உணர்ந்திருந்தோம். 
உணர்ந்திருப்பாய் எனநினைந்து, 
உரைக்கவில்லை 
நீயும் தான்.

இனியாவது சொல்லிவிடு.


Monday 17 December 2012

அந்த இரவுகள் அழகானவை(ஒரு உரைநடைப்பகிர்வு)

இரவுகள் அழகானவை .  
நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் 
இரவுகள் மிக மிக அழகாவை. 
சூழ்ந்திருக்கும் அமைதியை, 
மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, 
இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, 
எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகுகளின் ஒலிகளை, 
தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை,
குறுக்கும் நெடுக்குமாக பறந்துபோகும் இரவுப்பறவைகளை,
மின்சார கம்பிகள் மீது கூட்டமாகவும்,
தனியனாகவும் இருக்கும் காகங்களை, 
இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும்.
பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,
அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகில்லாமல் போகும். 

Tuesday 11 December 2012

இது மாரிகாலம் எந்தனூரில்..................


கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த
நிழல் படிந்து மறையும்,
வெயில் பட்டு தேகம் சிலிக்கும்,
மெல்லிய கூதல் காற்றில் பரவும்.
மாலை சரிகையில் _அந்தரத்தில்
மழைப்பூச்சிகள் உலாவும்
பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்.
இது மாரிகாலம் எந்தனூரில்.

நீர் மோதும் வரப்புகளில்,
கொக்குகளும் நாரைகளும் நடைபோடும்
இரை தேடி,
சிலநேரம் இடம் மாறும்.
வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம்
மிதப்பவற்றில் எல்லாம்
எரியெறும்புகள் ஏறித்தவிக்கும்.

காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள்
நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில்
விதைக்காத சில நிலத்தில்
அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும்.
இது மாரிகாலம் எந்தனூரில்.

பச்சைபிடித்து,
அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில்
அடங்கி இருக்கும் வைரவருக்கு
திருவம்பா பூஜை நடக்கும்.
தலைமுறையாய் தொடரும்
சங்கூதலும் சில களவுகளும்.
நடக்கும் இம்முறையும்.

ஆறுமணிக்கே இருட்டும்
நேரம்கடந்தும்,
பசும்புல் படர்ந்திருக்கும் மைதானத்தில்,
வழக்காடிய கதைகளுடன்
எப்படியும் இருப்பர் ஒரு சிலராவது.
இது மாரிகாலம் எந்தனூரில்.

*மதவடியும் வேலகாடும்
தேவதை கடக்கும் சந்திகள்.
யாருக்காக யார் என்றே தெரியாது
ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது.
கண்டும் காணாமலும் கடந்து போன
அவளுக்குள்ளும் _அந்த
மாரிகாலம் இன்னும் இருக்கும்.

இங்கேயும்,
இது மாரிகாலம் தானாம்.
மரங்களிலும் வீதிகளிலும்
அடுக்கு மாடிகளிலும் பனி படர்ந்து குளிர்கிறது._பின்
மழை கழுவி போகிறது.
"இது மாரிகாலம் தான்".
எல்லோரும் சொல்கிறார்கள்.
என்னால் அப்படி சொல்லமுடியவில்லை.!!!!!!!!!

*நெற்கொழு :எனது கிராமம்(மருதநிலம் )
*மதவடியும் வேலகாடும் :எனது ஊரின் சந்திகள்.

Tuesday 4 December 2012

யாதொன்றினதும் கைதிகள் அல்ல.............


நிலம்கீறி வெளிவரும் 
முளையங்களாய் 
புலன்கீறி விழுமென்  வார்த்தைகள் _என்றுமே 
யாதொன்றினதும் கைதிகள் அல்ல,

ஒப்புக்காகவும் 
ஒப்பனைக்காகவும் 
அலங்கரித்துக்கொண்டவை என்றோ,
கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ,
தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, 
சட்டமிடவும் இயலவில்லை.

சில இரவுகளில் நிகழுமிந்த 
ஒளிப்பகுப்பில்_என் 
அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது.
அந்த கணங்களில்,
அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் 
தேவதைகளின் கொலுசுகள் 
ஓசைலயமிடுகின்றன.

ஆழ்ந்த பெருமூச்சுக்களை  
வெளியேற்றும்_இந்த 
பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் 
ஆத்மதிருப்தியின் வாசம் 
அலாதியானது. அமைதியானது.

இதுவெல்லாம் 
எனக்கானது. 
நீ என் 
இடத்தில் இருந்தால் உனக்கானது.

இப்படித்தான் 
கடந்துபோக முடிகிறது 
காலங்களையும் கவிதைகளையும் 
உன்னால் என்னால் அவர்களால்  

தெருவோரத்தில் விழுந்த சில்லறை 
கண்டுகொள்ளப்படாமல் புதைந்தும் போகலாம்.
பெறுமதி சிதைந்து போனதில்லை.
இவன்  கவிதைகளும் தான்!!!!

Monday 26 November 2012

முத்தமிழ் காத்த மூலவர்கள்

 செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள்
சங்கத்தமிழ் காத்த செம்மல்கள்
வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள்
வீரத்தமிழின் மங்கள கீதங்கள்

தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள்
தேசம் சுமந்த விழுதுகள்
யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும்
யாதுமாகி நிறைந்த தென்றல்கள்

முத்தமிழ்  காத்த  மூலவர்கள்_எம்
மூச்சாகி நிலைத்த காவலர்கள் 
நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் 
நினைவுகளில் வாழும் ஓவியங்கள். 

மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி
முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்
தளர்வகற்றி தடையுடைக்குமொரு வழியெடுக்க
தலைநிமிர்த்தியொரு சபதமெடுப்போம் !!!

Thursday 22 November 2012

பெருந்தீ சுமந்தோரே, வாருங்கள் மலர்கள் சுமந்து.....

திசைகள் மூடி இருள் கவிழும் 
இந்த பனிப்பொழுதின் 
ஈரமெல்லாம் உலர்ந்து 
மோதிக்கடக்கிறது காற்று,

இனி 
பெரு வீதிகளிலும் ஓரங்களிலும்
படரும் பின்உருகி கசியும் பனித்திரள்.
இந்த மனங்களைப்போல,

இலைகளை உதிர்த்திவிட்டு 
வேர்களில் உயிர்ப்பை 
ஒளித்துக்கொண்ட மரங்களாய்
உள்ளெரியும் பெருந்தீயை மறைத்து 
பொறுத்திருக்கிறோம் இந்த கார்த்திகையிலும்,

கொழுந்துவிட்டெரியும் 
பெருந்தீயில் கொதித்து  
உருகி வடிந்து  கண்ணீராய் வெளிவருகிறது 
கோபங்களும் ஆற்றாமைகளும்,

நாளை,
சூரியதேவனின் தீண்டல்களால் 
துளிர்க்கும்மரங்கள் _ சட்டென 
வெடித்துக்கிளம்பி முகிழ்விடும்.
அந்த வசந்தகாலத்தில் 
பெரும் இடிகொண்டு இறங்கும் ஊழித்தீ.

பிரளய அதிர்வுகளை பிறப்பித்து
பொழியத்தொடங்கும் ஊழித்தீயில்
இரத்தகறைகளும் உக்காத உடல்களும்
எரிந்தழிந்து போக,
சுடுகாடாகிய என்தேசம்
குளிர்ந்து மீளக்கருக்கொள்ளும்.

இன்று
கொடிய ஒரு இலையுதிர்காலத்தை
சுமத்திவிட்டது காலம்.

இந்த
இழிகாலத்தை
கடந்து போவோம் பெருந்தீயுடன்.

பெருந்தீ சுமந்தோரே,
வாருங்கள் மலர்கள் சுமந்து_இது
தேகத்தை கரைத்த தெய்வங்கள்
கண்விழிக்கும் காலம்,
ஒளியேற்றி மலர்தூவி_நாம்
காலவெளி கடக்கும் கதைகளை சொல்லுவோம்.

Monday 19 November 2012

சகிப்புக்கு பின்னான வன்மங்கள்.......!!!


திணிக்கப்பட்ட  பாதையின் ஓரத்தில் 
படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள் 
தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் 
இறுதி மூச்சுக்களாய் தீண்டும் 
ஒவ்வொருவரையும், 

அநாதரவான அந்த ஒலிகளின் 
ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும் 
நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின்
உறையாத கறைநிழலில்,
ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள்
முகத்திலறைந்து போகும்.

வினோத திரையொன்றால் 
முகங்களை மறைத்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம்
எந்த சங்கடமுமில்லாமல்,

ஏற்கனவே 
திணிக்கப்பட்ட பாதையில்
விலத்திக்கொண்ட சுயவன்மங்கள்
சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!!








Monday 12 November 2012

இவன்தான் இவன்தான் தமிழன்


 தொழுவான் தமிழன்
தொடர் தொல்லை கொடுத்தால் 
அழுவான்  அடங்கியேயவன் 
விழுவான் காலிலேன்றே யார்ப்பரித்த தன்று பகை!

ஆண்ட இனம், 
அரசுகொடி சுற்றமென்று வாழ்ந்த இனம்,
கண்டமெல்லாம் கடந்து தமிழ் 
கொண்டுசென்று நிலைத்த இனம், 
பண்பாடிப்பாங்காய் பளுவின்றியொரு
பகையின்றி வாழ நினைத்த இனம்,

இனங்கள் சமமென்று 
இதயத்தால் உரைத்தனர் எம்மவர். 
பிணங்கள்தான் விழுமென்றனர் சமமென்றால்,
பிரதானிதாமென்றே தம்மொழியென்றே 
இணக்கமின்றியே இயற்றினர் பல்கதை!!

அடங்குகையில் அடித்தனர் 
ஒதுங்குகையில் ஓங்கி உதைத்தனர் 
பதுங்குகையில் பாடையே கட்டினர்_தடுமாறி 
தாங்குகையில் தாய்மண்ணையே சிதைத்தனர்.

ஓடியவன் திரும்பினான் 
ஒதுங்கியவன் நிமிர்ந்தான் 
பதுங்கியவன் எழுந்தான் 
தாங்கியவன் துடித்தான்.

விடுதலையொன்றே மூச்சாய்
வில்லிருந்து விடுபட்ட சரமாய் 
கொடுபடைமுடிக்க புறப்பட்டனர் 
கொள்கையோடு நம்மவர்.

அணிகள் பல ஆங்கு முகாம்கள் சில 
பணிகள் ஒன்றே அதன் வழிகள் ஒன்றே 
இனிவிடுதலையெமக்கே  அகமகிழ்ந்தது தமிழ்_அந்தோ 
பனிப்போர் விளைந்தது பல்லுயிர் பிரிந்தது.

அன்றேமகிழ்ந்த பகை _இன்று 
கைகோர்த்து நின்றே நடந்தது,
வென்றிடவென்றேயொரு 
வரைமுறையின்றி கொன்றழித்து எக்களித்தது.
என்றுமில்லா பேரழிவு 
எந்தையினத்தின் சீரழிவு._இன்றும் 

ஒன்றுபடாத்தமிழன் இவனுக்கேதுக்கடா மானம் 
இரண்டகமிவன் குணம்  இவனுக்கேதடா வெட்கம் 
கூனிகுழைந்து மடியேந்தும் இவனுக்கேதடா ரோசம்.
அடிதொழுது உயிர்வாழும் இவனுக்கேதடா வீரம்.


Friday 2 November 2012

மைகளாலும் புணரப்படுபவள்........... !!

விழியோரங்களில் மலரும் 
துளிப்பூக்களின் வாசங்களை 
நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின்,

தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை,
மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை,
கணநேர ஈனப்பிதற்றல்களை,
பொய்நாக்குகளின் வீணிகளை,
விலக்கி சீராக்கமுடிகிறது   
படுக்கையொன்றை இலகுவாக அவளால்.

இது 
திணிக்கப்பட்டதா என்றாலும் 
தவிர்க்கமுடியாதா என்றாலும்
தெரியாதென்பதே பதிலாகுகிறது.

வகையறியும் பார்வைகளை 
தகையுரியும் நாவுரைகளை  
முகைகருக்கும் வசவுகளை  
பகைபெருக்குமோர் பல்லவிகளை 
நகைத்தேவிலக்கி  யுள்யெரிதலவள் வழக்காயிற்று.

தினவெடுத்த மிருகங்களின்
நாவுகளில் படிந்திருக்கும் 
அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,
தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்
இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்

இவள் 
உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின் 
உயிரிருப்பினால் இன்னும் 
உயிரோடிருக்கிறது சில மனிதர்களின் சந்ததி.

நாளையிவளின்,
வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்
வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம், 
எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு.


Thursday 25 October 2012

உல(தி)ராத காயங்கள்

வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த 
 நினைவுகளின்  வெதும்பல்கள் 
விளிம்பு நிலையொன்றில் 
முனகிக்கிடக்கும்,


பகலின் நிர்வாணத்தின் முன் 
கூனிக்குறுகிக்கிடக்கும் அவை
இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து
அதீதமான பிரவாகத்துடன் 
ஓரங்களை தின்னத்தொடங்கும்.

இரைமுகரும் எலியொன்றின்
அச்சம் கலந்த கரியகண்களை,
இரையாகும் தவளையொன்றின்
ஈன அவல ஒலிகளை
உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும்.

தகனமொன்றின் நாற்றங்களை
பின்னான எச்சங்களை 
அருகிருக்கும் இலைகளில்
படிந்திருக்கும் புகைகுறியீடுகளை
விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை
பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த
துர்தேவதைகளின் கொலுசொலிகள் 
நாளைமீதான வெறுப்பினை,

விதைகளை வெறுக்கும் விருட்சத்தின் 
வேர்களில் படிந்திருக்கும்  
ஒரு இலையுதிர்காலத்தின்  கண்ணீர்.



Monday 15 October 2012

வேர்கள் அ(ழு)லைகின்றன


மழைக்கூதல்
தேகம் தீண்டிப்பரவியவள் 
சோம்பல் கலைத்தது.

கிளைகளின்  ஆலாபனை
இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு 
கடகத்துள் கிடந்த நாயின் முனகல் 
கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென,
அறிகுறிகளால் அவஸ்த்தைகளை 
உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.

அள்ளிவந்திருந்த 
கொக்காரை பன்னாடைகளை
தாவரத்து ஓரம்தள்ளி 
மழைநீரேந்த பானைகளை அடுக்கி,
தூவானம் தொடாதவிடத்தில் 
காயாத ஆடைகளை கட்டி,
உவனிக்காதவிடம்  பார்த்து 
அடைக்கோழியின் கூட்டையரக்கி, 
பெருமூச்சுடன் வான்பார்க்கையில் 
விழுந்தது துளிகள் முகத்தில்.

பாத்திரங்களில் ஒழுக்கு நீர் 
ஒசைலயத்துடன் விழ,
தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம் 
சாம்பலற்ற அடுப்போரம் 
வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்.
சன்னங்கள் துளையிட்ட சுவரில் 
ஈரத்தின் நரம்புகள் பரவத்தொடங்கின.
சட்டமிடப்பட்ட மகனின் படத்தை 
கழற்றியிருபுறம் துடைத்தாள். பார்த்தாள்.
கேணல் சுடரவன்.
தடவினாள் சுருக்கம் விழுந்த
விரல்களால் பெயரை.

செய்தி ......................................!!!!
மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள்
புலம்பெயர் தேசங்களில் வெகுவிமர்சையாக 
மேற்கொள்ளப்படுகின்றன.




Monday 8 October 2012

நுகராத வாசனை

மலர் உதிரும்  ஓசையொன்றால்
குலைந்து போனவன் 
தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான்.

தேர்ந்த ஓரிடத்தில் 
நிறங்களை ஒதுக்கி
மௌனப்பாறைகளால் சுவர்களையும், 
நிர்வாணத்தை நிகழ்த்தி 
தனிமையால் புதர்களையும் 
உருவாக்கினான் முதலில். 

இருளடர்ந்த சுவருக்குள் 
வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க 
வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் 
கிளைகளின் ஈரலிப்பில் 
பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் 
மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான்.

கல்லறையின் வாசலில் 
இறகொன்று கிடந்தது 
பறத்தல் பற்றிய கனவோடு...................


Saturday 6 October 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளில் மக்களின் பங்களிப்பு.......

           தமிழரின் பூர்விக தாயக நிலங்களில் முக்கியமானதும்,பல்லினப்பரம்பல்  கொண்டதுமான கிழக்கின் மாகாணசபை தேர்தல் முடிந்து பெருத்த ஏமாற்றங்களையும்,சலிப்புக்களையும்  உருவாக்கி, மீண்டும் மீண்டும் தமது பதவி மற்றும் அரசஅதிகார மையங்களுக்கான அடிபனிவினை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளின்  கேவல முகங்களை வெளிக்காட்டி இன்று கொஞ்சம் ஓய்ந்து போயுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை  உருவாக்கி விட்டு தேர்தல் களமிறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேர்தல் முடிவுகளுக்கு பின்னான மேற்கொண்ட அரசியல்முதிச்சி அற்ற செயற்பாடுகள் பெருத்த விசனங்களையும், நம்பிக்கையீனங்களையும் புலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில்  விதைத்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. முஸ்லீம்காங்கிரசின்  கபட அரசியல் வியூகங்களை நாடிபிடித்தறிய முடியாத நிலையில் இன்னும் தமிழ்தலைமைகள் இருப்பதையிட்டு இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமானதும் அமைதியானதுமான ஒரு தீர்வினை நோக்கி நகரமுடியுமா என்ற ஐயங்களை உருவாக்குகிறது.இது இவ்வாறு இருக்க,
                                                                 சமகாலத்தில் மீளவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள் ஒலிக்கத்தொடங்கி விட்டது. இம்முறை கொஞ்சம் பலமாக.பொதுவாக தேர்தல்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் இவ்வாறான கோசங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அங்கத்துவ கட்சிகளால் எழுப்பப்படுவது வழமையாகிவிட்டது  2009 களின் பின்பாக. கிழக்கின் வேட்பாளர் தெரிவுகளில் அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்பட்ட  ஒதுக்கீடுகள் மிகுந்த சர்ச்சைகளை உள்ளரங்கில் உருவாக்கியிருந்தன. இந்தநிலை வடக்கு  மாகானசபை தேர்தலிலும் உருவாகிவிடக்கூடாது என்பதில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தமிழரசுக்கட்சி தவிர்ந்த அங்கத்துவ கட்சிகள் மிகுந்த முனைப்புடன் செயற்படுவதையே உள்ளார்ந்து உணரமுடிகிறது. ஒரு இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தனித்துவ கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மாற்றியமைக்க முயல்வது போல காட்டிக்கொண்டு தங்களின் அரசியல் இருப்பினை தக்க வைக்கவே அதிகம் முனைகிறார்கள் எனலாம். தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு .ஆனந்தசங்கரி அவர்களை முன்னிறுத்தி நகரும் இவர்களின் நகர்வானது தற்போதைய பாராளுமன்ற குழுத்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெரியப்படாத தலைவருமாக இயங்கிக்கொண்டிருக்கும் சம்மந்தன் அவர்களுக்கு  நெருக்கடிகளை கொடுத்து பணிய வைக்கும் ஒரு நகர்வாகவே இருக்கும்.
                                                                           
தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததற்காகன ஒரே  காரணம் தமிழ் மக்களின் அபிலாசைகளை, தமிழ் மக்களுக்கான  அரசியல் வெற்றிடம் உருவாகாமல்   புலத்திலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரத்துடன் செயல்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக விடுதலைப்புலிகளின் அனுசரணைகளுடன் உருவாக்கப்பட்டதே ஆகும் . இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புள் அங்கத்துவம் பெற்றிருந்த  தமிழர் விடுதலைக்கூட்டணியின் வாழ்நாள் பாரளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கப்படும், கூட்டணியின் தலைவராகவும் இருந்த மு.சிவசிதம்பரம் அவர்கள், தன்  இறுதிக்காலத்தில் தலைவருக்கு தான் தொண்டன் என்ற கருத்தியலை முன் வைத்து இருந்தார் என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய விடயமாகும். ஆயுத போராட்டமானது மௌனிக்கபட்ட பின்னான நிலையில் ஏற்பட வெற்றிடத்தினை,பேரம் பேசும் ஆற்றலினை  விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரப்பி தொடர்ந்தும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள்.ஆனால் இன்று  தலைமைத்துவ வெற்றிடத்தில் தங்கள் இருப்பினை தக்கவைக்கும் பொறிமுறையில் நம்பிக்கை வைத்து   தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஒரு தனி மனித எச்சாதிகாரங்களால் வழிநடத்தப்படுவதை  உணர முடிகிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மீளவும் தமிழ் மக்களின் இருப்பினை ஆதால பாதளத்தில் தள்ளிவிடுவதாகவே அமையும். இந்த இக்கட்டான நிலையினை தவிர்த்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஒருமித்த குரலாய் ஒலிக்கவும், உலகநாடுகளுக்கு எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுதியம்புவதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைபின் அங்கத்துவ கட்சிகளிடம் ஒரு உள்ளார்ந்த அர்ப்பணிப்பு அவசியமாகும். அரசியல் இருப்பினை கடந்து தாம் சார்ந்து நிற்கும்  மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்படும் ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு மாற்றம் பெறவேண்டும்.அதற்கான உடனடித்தேவையாக கூட்டமைப்பின் மதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு  கூட்டமைபினை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மத்திய குழுவில் மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுடாகவே கூட்டமைபின் எந்தொரு நடவெடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இங்கே மூன்றாம் நிலைத்தலைவர்கள் அல்லது புத்திஜீவிகள் என்பது, முன்னாள் ஆயுதக்குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாராத மக்களின் மீது, மக்களின் அபிலாசைகள் மீது கரிசனை கொண்ட வாக்கு அரசியலையோ,அதிகார மையங்களையோ நாடாத கல்வியாளர்களை,சமூக ஆர்வலர்களை குறிப்பதாகவே இருக்கிறது.
                                                                          கிழக்கின் மாகாண சபை தேர்தல்களுக்கு முன்பாக  தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய சிவில் சமூகத்தினரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு தீர்க்கமான பதில் எதுவும் வழங்காத கூட்டமைப்பின் பேசவல்ல உறுப்பினர்கள், தேர்தல் முடிந்து கூட்டமைப்பினை பதிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அறிந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் ஆணையை யாருக்கும் மக்கள் வழங்கி இருக்கவில்லை என கூறி தங்களில் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள கேள்விகளை கேட்பவர்கள் மீது ஒரு வித துரோகிகள் பட்டத்தை கொடுக்க முன் வந்தனர்.மக்களின் ஆணையை என்றுமே கருத்தில் கொள்ளாது, மக்களின் கேள்விகளுக்கு பதில்  அளிக்காது, ஒரு பகிரங்க சந்திப்புக்களையோ,அல்லது கலந்துரையாடல்களையோ  நிகழ்த்த மறுக்கும் கூட்டமைப்பின் சில எச்சாதிகார உறுப்பினர்கள் இவ்வாறு அறிக்கைள் விடுவதன் மூலம் தங்களின் இருப்பின் தன்மையை உறுதி செய்யவே முயல்கிறார்கள் என்பது ஆணையை வழங்கிய மக்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் கூட்டமைப்பினை மத்தியகுழு ஒன்றினை உருவாக்கி அதனூடாக  பதிவு செய்வதன் மூலம் தமிழரசுக்கட்சி தன் தகமைவாய்ந்த இருப்பினை இழந்துவிடும் என்ற அச்சமே காரணமாகும். இன்றைவரைக்கும் வீட்டு  சின்னத்தில் போட்டியிட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் உரிமைகோரக்கூடிய நிலையில் இருப்பது தமிழரசுக்கட்சி தான். ஒருவகையில் நோக்கினால் கூடமைப்பின் அங்கதுவக்கட்சிகளின் அச்சத்துக்கு காரணமாக இதுவே இருப்பதையும் உணரலாம். மக்கள்நலன் அக்கறை கொண்டதாக  காட்டிக்கொளும் இவர்களின் பயமும் தங்களின் இருப்புகள் மீதே இருப்பதை காணலாம்.உண்மையில் யாதார்த்த ரீதியாக நோக்கினால் இன்றைய அரசியல் தலைமைகள் தங்களின் நலன் மீது அக்கறை கொண்டு நகர்கின்றனவே தவிர மக்களின் நலன் மீது அல்ல என்பது தெளிவாகிறது.
                                                         இந்த நிலைகள் தொடரும் படசத்தில் தமிழர் அரசியல் அரங்கில் மீளவும் ஒரு பாரிய பெற்றிடம் ஒன்று  உருவாகி, தமிர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிவிடும் நிலை உருவாகும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலான தமிழர் போராட்டங்கள், தியாகங்கள்  மறக்கடிக்கப்பட்டு, உயிர் சொத்து அழிவுகள் எல்லாம் பலனற்று போய்விடும்.  இந்த நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும், புலத்தில் தொடர்ந்தும் இயங்கு நிலையில் இருக்கும் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் உடனடியான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து  தமிழ் தேசிய கூட்டமைப்பில் மத்திய குழு ஒன்றினை உருவாக்கி, அதனூடாக  கூட்டமைப்பினை  பதிவு செய்வதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை கூட்டமைப்பின் இன்றைய தலைவர்களுக்கு உடனடியாக கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் கூட்டமைப்பிணை  பாரிய பிளவொன்றினை நோக்கி நகர்த்தும் கூட்டமைப்பின் தலைவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுத்த கேவலமான குற்றச்சாட்டை வரலாறு  புலம் பெயர் தமிழர்கள் மீதும்,புலத்திலிருக்கும் புத்திஜீவிகள் மீதும்  சுமத்திவிடும்.
                                                     
                                                                         

Thursday 4 October 2012

ஹைக்கூ ............(முயற்சி இரண்டு)

சருகுகளை எரிக்காதீர்கள்
பாவம் நாளைய குழந்தைக்கான
மின்மினிப்பூச்சிகள்.




கலப்பை கீறிய நிலங்களில்
முளைக்கின்றன எலும்புக்கள்
ஈழதேசம்.

                                                                                                             
மாலை யாகியதால்
கசங்கியது மலர்
பிணத்தின் மேல்.




பசியாறும் பந்தியில்
பரபரத்தது மனது
வளையல் ஓசை


வேர்களும் இலைகளும்
தலையாட்டின மகிழ்ச்சியில்
ஏணைக்குள் குழந்தை 


                                பருவத்துக்கு வரும்
பறவைகள் பறப்பதில்லை
மனதை விட்டு.

                                                       
வேம்போ நுணாவோ
குரலில் பிசிறில்லை குயில்.
நான்.






இறந்த நண்பர்களுக்கு அஞ்சலி 
உதிர்த்தியது காற்று.
பூக்களை

                                                       


Tuesday 25 September 2012

கண்ணீரை சேமிப்பவன்


தூரிகை தொடாத வர்ணத்தின் 
துர்மணமாய் அடங்கிக்கிடக்கும் 
ரணமொன்றின் கசிவுகள்,
அதிகாலை அமைதிக்குள் 
வான் துப்பும் தீக்கங்குகளாகி தெறித்து 
கருகி கரையும் ஆதங்கத்தோடு.

வடிகால் தேடாத கசிவுகளின் திசுக்கள் 
கடவுளாகி இருந்தது.
மந்திரங்களும் மலர் அர்ச்சிப்புக்களும் 
கைதட்டல்களும் கரைந்து கொண்டிருந்தன.

புடம் போடுதலென்ற போர்வையில் 
வடிவங்களை மாற்றிய பின்னும் 
அந்தரங்க துவாரங்களில் வழிந்துகொண்டிருந்தது
கசிவுகளின் வன்மம் துர்வாசனையோடு. 

கரையாத திசுக்களின் வேர்களில் 
கண்ணீரை பாச்சத்தொடங்கினேன்......
உவர்ப்பின்  பிசுபிசுப்பில் கருகத்தொடங்கியது
திசுக்கள் ஒவ்வொன்றாக ....

அக்கணமே 
சேமிக்கதொடங்கினேன் கண்ணீரை _இனி 
எங்கெல்லாம் ரணங்களோ 
அங்கெல்லாம் வருவேன் சுமந்து.

Monday 24 September 2012

அறிவிக்கப்படும் சுயரூபம் ......................


தொலைந்துபோதல் 
எப்போதும்  எங்கேயும் 
இலகுவான ஒன்றல்ல,

தொலைவதற்கு முன்னான கணங்கள் 
தயார்ப்படுத்தலின் தளம்பல்களை 
வெளிவிடும் ஒரு நீர்வட்டம் போல,

ஒவ்வொன்றாக விலக்கிய பின்னும் 
ஒன்றாவது விலகாமல் நிலைத்திருக்கும் _அது 
குற்றஉணர்ச்சியாகவும் இருக்கலாம்.

இருளின் கனதியொன்றை ஊடறுக்கும் 
தெருநாயின் ஊளையைப்போலவும்
வயல்வெளிகளில் எதிரொலிக்கும் 
ஆட்காட்டிகளின்  அவலசத்தமாகவும்
உன் மூச்சு சத்தமே உனக்கு கேட்கலாம்.

தடயங்களை அழிக்க தொடங்குதல் 
தடயமாகிவிடும் சாத்தியத்தை 
விழிகள் அல்லது  மௌனம் 
சொல்லிவிடும் எல்லோருக்கும்.

அதற்கு பின்னான 
உனது கணங்களை அறிவதற்கான 
முயற்சியாகவும் இருக்கலாம்.
அப்படியாக  மட்டும்  இருந்துவிட்டால்,

அதற்கான 
முழுப்பொறுப்பையும் சுமக்க வேண்டிய
பரிதாபத்துக்குரியவர்கள் நாங்களே.


Tuesday 18 September 2012

யதார்த்த யாத்திரிகன்


ஏகாந்த பொழுதொன்றில் 
அலையத்தொடங்கிய நினைவுகள் 
பரிணாமத்தின் முடிவில் 
ஏதிலியாய் உணர்ந்தன

ஆதியின் போர்வைகளுள் 
தனக்கான சிதையொன்றை  உருவாக்கி 
காத்திருக்கதொடங்கியது நாளைக்காக.......

அந்த கணங்களில் 
அவற்றின் பிளவுகளூடாக 
வழிந்துகொண்டிருந்தது ஆற்றாமையின் நிழல் 
உருவமற்ற அவற்றின் கனதிகளால் 
மிக மிக ஆழத்தில் அமிழ்த்தப்பட்டது  
வாழ்வுக்கான அர்த்தம்.

ரகசிய பெருமூச்சின் ஒலிகளால் 
ஊழிக்கால அழிவுகளை 
உள்ளெங்கும் நிகழ்த்திவிட்டு 
இறுகிப்போனது வைரமாய் உள்ளேயே ,

இப்போதெல்லாம் .......
சரித்திர புன்னகைகளை வழியவிடும் 
உதடுகளின் ஓரங்களில் 
சலனமில்லாமல் நிகழ்ந்துவிடுகிறது
அழகிய மரணமொன்று.

Friday 14 September 2012

தடம் மாறும் தமிழ்தேசியகூட்டமைப்பும், கிழக்கு மாகான சபையும்.

                                                               இறையாண்மையை இழந்து  நிற்கும் தமிழ் இனத்தின்  பூர்விக தேசமும், வரலாற்று ரீதியாகவும்,பூகோளரீதியாகவும் தலைநகராக நிர்ணயிக்கப்பட்ட மாவட்டத்தினை உள்ளடக்கியதுமான கிழக்கு மாகான சபையின் தேர்தல், அரச இயந்திரத்தின் உச்சக்கட்ட வலுவை பயன்படுத்தி,தமக்கு சாதகமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை தமிழ் முஸ்லிம்  மக்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகான சபையில்,பெரும்பான்மை அரசானது வெற்றிபெற்றிருப்பதும் ,அதிகூடிய விருப்பு விருப்பு வாக்கினை பெற்று முன்னாள் முதலமைச்சர் மட்டும் அவரது கட்சி சார்பில் தெரிவாகி இருப்பதும்,நடந்து முடிந்த தேர்தல் நியாயமாக நடந்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இருக்க,இந்த பத்தி நடந்து முடிந்த தேர்தல் பற்றிய தேடலுக்காக அல்ல. தேர்தலில் போட்டியிட்டு பதினொரு ஆசனங்களை பெற்று, இரண்டாவது  நிலையிலும்,ஓரளவு ஆட்சியினை அமைக்க கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கு பின்னான நிலைகள் குறித்த ஒரு கருத்துப்பகிர்வுக்காகவே.
                                                இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை ஆராய்தல் அரைத்த மாவையே அரைக்கும் ஒரு செயலாகும் என்பதால்,நேரடியாக கிழக்கு மாகாண சபைதேர்தலின் பின்னான நிலைக்கு வருவோம்.
                                                 தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட பின்,மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் அறிக்கைகைகளை விடுத்தார். எந்த ஒரு நிலையிலும் கிழக்கின் ஆட்சி பொறுப்பு தமக்கே என்றும்,அரசின் எந்தவொரு மிரட்டலுக்கும் அல்லது சலுகைகாகவும் அதை விட்டுக்கொடுக்க போவதில்லை என்றும் முழங்கினார்.எந்த ஒரு அதிகாரங்களும் இல்லாத,ஆளுனரால் கட்டுப்படுத்தகூடிய ஒரு பொம்மை முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுவதாக தோன்றினாலும், கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் இருப்பினை உறுதிப்படுத்தவும்,தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஒரு தீர்மானமான தகவலை வெளியுலகத்துக்கு சொல்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாக  இந்த வெற்றியினை,முதலமைச்சர் பதவியினை கைக்கொள்ள முயல்வதாக ஒரு அர்த்தத்தினை கற்பிதம் செய்யலாம்.இருந்தாலும்,பின்னர் ஆட்சி அமைக்க தேவையான 19 ஆசனங்கள் என்ற இலக்கினை அடைவது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேசவல்ல பல உறுப்பினர்கள் கூறிய  கருத்துக்கள் மீளவும் அவர்களின் அப்பட்டமான அடிபணிவு அரசியலை வெளிப்படுத்தி நின்றது.
                                                எந்த ஒரு பேரம் பேசுதலும் இல்லாமல்,எடுத்த எடுப்பிலேயே ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஆளுநரிடம் வைக்கபோவதாக அறிவித்தனர்.(இந்த இடத்தில் முல்லிம் காங்கிரஸ் பற்றி பின்னர் பார்ப்போம்).அரசுக்கு எதிராக,கண்மூடித்தனமான அரவணைப்பின் மூலம் ஆட்சியினை பெற்றுக்கொள்ள முன் வந்தனரே தவிர அதன் விளைவுகள் பற்றி எதுமே யோசிக்கவில்லை.கிழக்கில் தமது பலவீனத்தை உணர்ந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றும் பேசாமல் தம் மென்மையான போக்கினை உணர்த்திவிட்டு அமைதியாகிவிட்டது.பழுத்த அரசியல் சானக்கியவாதியான ரணில் கிழக்குக்கான வியூகங்களை பெரும்பான்மை இனத்துக்கு சாதகாக்கி கொண்டு  தங்களின் இருப்புக்கு பங்கம் வராத வகையில் நகர்த்துவதில் என்றும் பின் நிற்க போவதில்லை.உதாரணமாக யாழில் சம்மந்தன் ரணில் இணைந்து நடத்திய மேதின நிகழ்வுகளை குறிப்பிடலாம்.ஆணியாய்  அறைந்த அந்த நிகழ்வின் வலிகள் இன்னும் மக்கள் மனதில் இருந்து காயவில்லை உணர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களோடு கை கோர்க்க முன் வந்திருப்பது கூட்டமைப்பின் அதிகார மோகத்தைத்தான் உணர்த்துகிறது. அடுத்தசில நடவெடிக்கைகள் மூலம் அதனை உறுதிப்படுத்தி நின்றனர்.இந்த சூழ்நிலையினை நன்கு உள்வாங்கி தங்களின் பங்களிப்பை சரியன  விதத்தில் பயன்படுத்த தொடங்கினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள்.அவர்களை பொறுத்தவரை தங்களின் இருப்பும்  அரசியல் பெறுமதியும் முக்கியமேதவிர அப்பாவி தமிழ் முஸ்லிம் அடிப்படை அபிலாசைகள் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லை.எங்கே தமக்கான சலுகைகளும்,அதிகாரங்களும் உடனடியாக கிடைக்குமோ அங்கே தாவிவிடுவதில் மட்டும் குறியாய் இருக்கின்றனர்.இந்த நிலை பெரும் தலைவர் அஷ்ரப்பின் மறைவின் பின் மேலோங்கி நிற்கிறது.
                                                 மதில் மேல் பூனையாக இருந்த மு.கவை தம் பக்கம் இழுப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பத்தில் எலும்புத்துண்டு களைத்தான் வீசியது.ஆனாலும் மு.கவின் மனதில் ஆரம்பம் முதலே அரசுடன் இணையும் ஒரு நெகிழ்வு தன்மை காணப்படட்டு  வந்திருந்தது. அரச பங்காளிக்கட்சியான தாம்,அரசின் மத விரோத காரணங்களால் தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக அரசில் இருந்து விலத்தி நின்று தேர்தலை முகம் கொடுத்து,அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை ஏப்பம் விட்டுவிட்டு மகிந்தரின் அடுப்படியில் படுப்பதே நோக்கமாக  இருந்தது.இவற்றை விடுத்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளுக்கு வருவோம்.எலும்புகளுக்கு அசையாத மு.க வுக்கு பாரிய விட்டுக்கொடுப்புடன் இணைய விருப்பம் தெரிவித்தனர்.அதாவது முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பங்கிடுவதாகவும்,முதல் முறையில் முஸ்லீம் காங்கிரஸ்க்கு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
                                                  ஆட்சி பொறுப்புக்காக அடிபணிவு அரசியலின் ஆழத்துக்கு இறங்கிய கூட்டமைப்பினர்,தமக்கு வாக்களித்த மக்களின் அபிலாசை பற்றிய எந்த கருதுகோளும் இல்லாமல், நிபந்தனைகளும் இல்லாமல் ஆட்சிக்கதிரைக்காக  இணைவதில்தான்  முன் நின்றனர்.ஆட்சிக்கான தகுதியை தக்க வைப்பதில் முன் நின்றவர்கள் இனத்துக்கான தேவையை மறந்து போனார்கள்.எதற்காக தமிழ் மக்கள்  ஒன்றிணைந்து  வாக்களித்து தங்களின்  பிரதிநிதியாய தமிழ் தேசிய கூட்டமைபை முன் நிறுத்தினார்கள் என்பதனை இலகுவாக மறந்து விட்டனர். எந்த ஒரு அதிகாரங்களும் இல்லாத இந்த சபையினை தக்கவைப்பதன் மூலம் எந்தனை சாதிக்க போகிறார்கள் என்று அறிக்கை கூட விடவில்லை.இனி கேட்டால் சிலநேரம், உங்களுக்கு எதுக்கு சொல்லணும் ?என ஊடகங்களையும் எல்லா விடயங்களையும் வெளிப்படையாக சொல்லமுடியாது என கூட்டங்களிலும் சொல்லி தங்களில் இராயதந்திரம் என்றும் இனி அரசால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அப்பாவி தமிழ் மக்களின் தலைகளில் குட்டுவார்கள்.
                                                         முஸ்லிம்  காங்கரஸ் ஐக்கிய சுகந்திர முன்னணி இணைவு ஓரளவு உறுதிப்படுத்தப்பட நிலையில்,கூட்டமைப்பின்   பேசவல்ல உறுப்பினரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு .சுமந்திரன்,  மகிந்த அரசு கோரிக்கை விடுத்தால் பொது வேலைத்திட்டத்தினூடக  இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என அறிவித்தார்.
                                                          எந்த ஒரு அரசு தமிழர்களை முஸ்லிம்களை இலங்கையில் இருந்து அகற்றி விடுவதாக கங்கணம் கட்டி செயல்படுகிறதோ,ஒரு பெரும் இன அழிப்பினை நிகழ்த்தி,ஆயிரமாயிரம் அப்பாவிகளின்,குழந்தைகளின்,முதியவர்களின் உயிரினை பொருட்படுத்தாமல் யுத்தத்தை நடத்தி தன்  இறுமாப்பை காட்டியதோ,எத்தனை ஆயிரம் இளம் பிராயத்தினரை சிறையில் எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் வைத்திருக்கிறதோ,கொலைகளை சிறையில் கூட நடத்தி தன்  இன வெறுப்பை உமிழும் அரசை,பாலியல் கொடுமைகளை இன்றுவரை எங்களின் சகோதரிகள் மீது பிரயோகித்து,அவர்களை கொலை செய்துவிடும் அரசை, ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து ஆட்சி நடத்த துணிந்துள்ளர்கள் என்றால்,
                                                                நில அபரிப்புகள் குடியேற்றங்களை தொடர்ந்து நடத்தும்,அதிகாரபகிர்வுக்கான திட்டங்கள் எதையும் உருவாக்காமல், இன்னும் புதிதாக தமிழர் தாயகத்தில் இராணுவ மையங்களை உருவாகும்,தொழில் சார் கட்டுப்பாடுகளை விதித்து,இன்னும் இராணுவ ஆட்சியில் வடக்கு கிழக்கை மட்டுமல்ல  முழு இலங்கையையும்  வைத்திருக்கும் ஒரு பாசிச அரசை,பொது வேலைத்திட்டம் ஒன்றினூடாக இணைந்து ஆட்சி நடத்த துணிந்துள்ளார்கள் என்றால்,
                                                           இனத்துவேச கட்சிகளை இணைத்து,சொந்த சகோதரங்களை கொன்றொழித்த இன்னும் கொன்றொழித்துவரும் ஆயுத ககுழுக்களை அரவணைத்து ஆட்சி செலுத்தும் ஒரு அரசை,இணைத்து ஆட்சி நடத்த துணிந்துள்ளார்கள் என்றால்,
                                                            சர்வகட்சி குழு உற்பட அரசால் உருவாக்கப்படும் அனைத்து அமைப்பு சார் குழுக்களையும் அரசின் இனவாத நடவெடிக்கைகளை காட்டி புறக்கணித்த கூட்டமைப்பினர் இன்று கிழக்கின் அதிகாரங்களுக்காக அரசுடன் இணைந்து நிற்க முன் வருகின்றனர் என்றால்,
                                                         பிள்ளையானை முதலமைச்சராக முனையும் அரசினை ஏற்று கருணா பிரதித்தலைவராக இருக்கும் கட்சியினை அரவணைத்து ஆட்சியினை நடத்த முனைகிறார்கள் என்றால்,
                                                          பெரும் இனப்படுகொலையை நடத்தி முடிந்த அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் முகமாக,மனிதஉரிமைகள் அமைப்புக்களால் நடத்தப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு சார்பாக வாக்களிக்குமாறு மத்திய முஸ்லிம் சமூக நாடுகளை கோரிய மு.க வுடன் இணைந்து ஆட்சி செய்ய முன் வருகின்றனர் என்றால்,
                                                           ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் தேர்தல்களை சந்திக்க மறுத்து,இன்று இனத்தினை அழித்தொழித்த அரசுடன் இணைந்து நிற்பது என்றால்,
                                                           
                                                                    எங்கே போகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு?எதற்காக உருவாக்கப்பட்டதோ,அந்த அச்சில் இருந்து எந்தளவு தூரம் விலகி வந்துள்ளது இன்று.பதவிக்காகவும்,தன் தொழில் மற்றும் சிறப்பு உரிமைக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளதா ?ஒரு தனி மனித சுயநலத்துக்காக மக்களின் வாக்குகளை பயன்படுத்தும் அதிகாரங்களை யார் தந்தது இவர்களிடம்.இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிவில் சமூகத்துக்குமான கலந்துரையாடல்கள் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவெடிக்களைகளில் நம்பிக்கை இழந்ததன் விளைவே இந்த சிவில் சமூகம் எழுந்திருந்தமைக்கான காரணம் ஆகும்.அன்றைய தினத்திலும்,சுயநிர்ணய உரிமைகள் பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களே வழங்கப்பட்டது கூட்டமைப்பின் தலைமையால்.
                                                              மக்கள் முன்னால்  நிற்கும் போது  மட்டும் தமிழ் தேசியம்,சுயநிர்ணய உரிமை என்று முழங்கும் கூட்டமைப்பு திரைமறைவில் என்ன செய்கிறது.தங்களின் சுய நல அரசியல் இருப்புக்காக தமிழர்களின் இறைமையை விலை பேசுகிறதா?அப்படியாயின் இவர்களுக்கும் டக்ளஸ், கருணா பிள்ளையான் போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்.சுமந்திரனின் இந்த கூற்றுக்கு இன்றுவரை எந்த ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் மறுப்பும் தெரிவிக்கப்படாமையானது,அவர்களும் சுமந்திரனின் இந்த கருத்தை வழி மொழிகிறார்களா அல்லது எதுவும் கதைக்கமுடியாத நிலையில் இருக்கிறார்களா ?
                                                           இந்த நிலையானது தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் சிதறடிக்கப்பட்டு,அடையாளமிழந்த ஒரு இனமாக மாறிவிடக்கூடும்.மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கவேண்டுமே தவிர,மக்களின் உணர்வுகளை புரியாத சுமந்திரன் போன்றவர்களின்  ஊதுகுழலாக இருக்க கூடாது.இனம் சார்ந்த சரியான முடிவுகளை எடுக்க தவறும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை முழுவதையும் இழக்கவேண்டி வரலாம்.
                                                              அடுத்துவரும் சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸின் நாடகத்தையும்,மகிந்த சகோதரர்களின் பண,பயமுறுத்தல் பலத்தினையும் தெளிவாக அறியலாம்.இந்த இடத்தில் தமிழ் தேசிய கூடமைப்பு எடுக்கும் முடிவானது,தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமையையும்,மகிந்த அரசின் இனவிரோத போக்கினையும் வெளிஉலகுக்கு தெரியப்படுத்துவதாக அமையவேண்டும்.தவறும் பட்சத்தில் வரலாற்று தவறொன்றினை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவிதி அடுத்த தேர்தல்களில் தீர்மானிக்கப்படும்.
       
படங்கள் :நன்றி இணையம்.