Sunday 30 December 2012

அவர்கள் அப்படி(யே)த்தான் இருக்கிறார்கள்.....!!!

                                      மேற்கு அடிவானை நோக்கி  சூரியன் நகரத்தொடங்கிய மாலைப்பொழுது. கண்ணைக்கூசும் மெல்லிய மஞ்சள் ஒளியால்  சுவர்கள், மரங்கள் என  வெளிச்சம்படும் இடங்கள் எல்லாம் மஞ்சளாக  மாறி இருந்தன. முன்வாசல் படிக்கட்டில் இருந்து   வீதியையே பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் மனம், அடிக்கடி நிறம்மாறி அங்கும் இங்கும் அலையும்  அடிவான்மேகங்களைப்  போல உணர்வுகளை மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தது.  "விடியக்காத்தல வெளிக்கிட்டதாக அதுகள் அடிச்சு சொன்னதுகள், இன்னும் இங்கை வரவில்லையே எப்படியும் இந்த நேரம் வந்திருக்கணுமே, என்ன ஆச்சோ, வந்தவாகனத்தில ஏதும் பிரச்சனையோ என்னண்டு தெரியேல்லையே, பிள்ளையின்ர போனும் வேலை செய்யுதில்லை, வான்காரனும் யார் என்று தெரியவில்லை" என புறுபுறுத்தபடி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதறிக்கிடந்தாள் செல்லம்மா. "கடவுளே தோட்டத்துக்கு போன மனுஷன் வரமுதல் வந்தாள் எண்டா தப்பினேன், இல்லாட்டி உந்த மனிசன் இண்டைக்கு சிப்பிலியாட்டித்தான் விடும்"  என கடவுளையும்  நோந்துகொண்டிருந்தவள்,  தூரத்தில் வாகனத்தின் இரைச்சல் கேட்டதும் அந்தரப்பட்டு வாசல் கேற்றை நோக்கி ஓடினாள். கோவிலடி முடக்கால் திரும்பி  வரும் வானைக்கண்டவுடன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள் செல்லம்மா.
                                       

Sunday 23 December 2012

இனியாவது சொல்லிவிடு.

மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ
வண்ணமும் வாசமும் தான் 
நாளுக்குநாள் மாறிக்கொண்டன.
நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் 
மலர்தலை தடுக்கவா முடியும். 

உன் விழிகள்  
ஏணியாகவும் இருந்தது _எனை 
தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது.

சிரித்தேன்.
கடந்தும் திரும்பி பார்த்தாய்.
விரும்பித்தானே பார்த்தாய்?

முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.

பகிர்ந்த சில வார்த்தைகளில்
பொதிந்திருக்குமோ  என்றெண்ணி, 
பகுத்தறிந்து அதுவா இதுவா 
என்றங்கலாய்த்தல்லவா_என் 
அனேக அந்திகள் கலைந்தது. 

மாரடிக்கும் பெண்(டு)கள் கூட 
ஓய்ந்ததுண்டு_உனை 
தேடிதிரிந்த நான்?

எரிகல் விழுகையிலும் 
கல் எறிகையிலும் 
உன்னைத்தான் நினைக்கிறேன்._மறுநாள் 
என்ன நினைத்திருப்பாய்.

எப்பவாது உன்வீட்டு நாய் _உனை 
கொஞ்சி இருக்குமே!
கலைத்த போதும் அது கூட 
கடிக்கவில்லையே !!

சாத்துப்படி இல்லாத 
விக்கிரகம் நீ 
சரிந்தும் படுக்கவிடாத 
சாமக்கோழியும் நீ.

தவறியொருமுறை 
கண்ட கழுத்துகீழ் மச்சம்_இன்னும் 
கண்டத்து சனியாய் வதைக்குது.
எனை மீறி சிலநேரம் 
விழி தேடிப்போகுது.

தாடியை தடவியபடியே _உனை 
நினைப்பது சுகம்,
தனியே கிடந்தது 
சிரிப்பது அதிலும் சுகம்.

நீ எரிகிறாய் 
நான் புகைகிறேன் 
நெருப்பும் புகையும் 
ஒரே  இடத்தில் இருக்கவேண்டும்.

அறுகருசியோ 
வாய்க்கருசியோ_அருகில் 
நீ இருந்தால் காணும்.

இந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது
யுன் இதழ் வடித்த நீரா?
என் கண்ணிதல் வடித்த துளியா?

உணர்ந்திருந்தோம். 
உணர்ந்திருப்பாய் எனநினைந்து, 
உரைக்கவில்லை 
நீயும் தான்.

இனியாவது சொல்லிவிடு.


Monday 17 December 2012

அந்த இரவுகள் அழகானவை(ஒரு உரைநடைப்பகிர்வு)

இரவுகள் அழகானவை .  
நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் 
இரவுகள் மிக மிக அழகாவை. 
சூழ்ந்திருக்கும் அமைதியை, 
மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, 
இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, 
எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகுகளின் ஒலிகளை, 
தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை,
குறுக்கும் நெடுக்குமாக பறந்துபோகும் இரவுப்பறவைகளை,
மின்சார கம்பிகள் மீது கூட்டமாகவும்,
தனியனாகவும் இருக்கும் காகங்களை, 
இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும்.
பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,
அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகில்லாமல் போகும். 

Tuesday 11 December 2012

இது மாரிகாலம் எந்தனூரில்..................


கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த
நிழல் படிந்து மறையும்,
வெயில் பட்டு தேகம் சிலிக்கும்,
மெல்லிய கூதல் காற்றில் பரவும்.
மாலை சரிகையில் _அந்தரத்தில்
மழைப்பூச்சிகள் உலாவும்
பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்.
இது மாரிகாலம் எந்தனூரில்.

நீர் மோதும் வரப்புகளில்,
கொக்குகளும் நாரைகளும் நடைபோடும்
இரை தேடி,
சிலநேரம் இடம் மாறும்.
வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம்
மிதப்பவற்றில் எல்லாம்
எரியெறும்புகள் ஏறித்தவிக்கும்.

காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள்
நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில்
விதைக்காத சில நிலத்தில்
அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும்.
இது மாரிகாலம் எந்தனூரில்.

பச்சைபிடித்து,
அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில்
அடங்கி இருக்கும் வைரவருக்கு
திருவம்பா பூஜை நடக்கும்.
தலைமுறையாய் தொடரும்
சங்கூதலும் சில களவுகளும்.
நடக்கும் இம்முறையும்.

ஆறுமணிக்கே இருட்டும்
நேரம்கடந்தும்,
பசும்புல் படர்ந்திருக்கும் மைதானத்தில்,
வழக்காடிய கதைகளுடன்
எப்படியும் இருப்பர் ஒரு சிலராவது.
இது மாரிகாலம் எந்தனூரில்.

*மதவடியும் வேலகாடும்
தேவதை கடக்கும் சந்திகள்.
யாருக்காக யார் என்றே தெரியாது
ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது.
கண்டும் காணாமலும் கடந்து போன
அவளுக்குள்ளும் _அந்த
மாரிகாலம் இன்னும் இருக்கும்.

இங்கேயும்,
இது மாரிகாலம் தானாம்.
மரங்களிலும் வீதிகளிலும்
அடுக்கு மாடிகளிலும் பனி படர்ந்து குளிர்கிறது._பின்
மழை கழுவி போகிறது.
"இது மாரிகாலம் தான்".
எல்லோரும் சொல்கிறார்கள்.
என்னால் அப்படி சொல்லமுடியவில்லை.!!!!!!!!!

*நெற்கொழு :எனது கிராமம்(மருதநிலம் )
*மதவடியும் வேலகாடும் :எனது ஊரின் சந்திகள்.

Tuesday 4 December 2012

யாதொன்றினதும் கைதிகள் அல்ல.............


நிலம்கீறி வெளிவரும் 
முளையங்களாய் 
புலன்கீறி விழுமென்  வார்த்தைகள் _என்றுமே 
யாதொன்றினதும் கைதிகள் அல்ல,

ஒப்புக்காகவும் 
ஒப்பனைக்காகவும் 
அலங்கரித்துக்கொண்டவை என்றோ,
கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ,
தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, 
சட்டமிடவும் இயலவில்லை.

சில இரவுகளில் நிகழுமிந்த 
ஒளிப்பகுப்பில்_என் 
அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது.
அந்த கணங்களில்,
அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் 
தேவதைகளின் கொலுசுகள் 
ஓசைலயமிடுகின்றன.

ஆழ்ந்த பெருமூச்சுக்களை  
வெளியேற்றும்_இந்த 
பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் 
ஆத்மதிருப்தியின் வாசம் 
அலாதியானது. அமைதியானது.

இதுவெல்லாம் 
எனக்கானது. 
நீ என் 
இடத்தில் இருந்தால் உனக்கானது.

இப்படித்தான் 
கடந்துபோக முடிகிறது 
காலங்களையும் கவிதைகளையும் 
உன்னால் என்னால் அவர்களால்  

தெருவோரத்தில் விழுந்த சில்லறை 
கண்டுகொள்ளப்படாமல் புதைந்தும் போகலாம்.
பெறுமதி சிதைந்து போனதில்லை.
இவன்  கவிதைகளும் தான்!!!!