Sunday 29 December 2013

திரும்பிப்பார்க்கிறேன் 2013....

நாளை புதிய வருடம்.

நேற்றுப்போல இருக்கிறது இரண்டாயிரத்து பதின்மூன்று(2013) ஆரம்பித்து... 

காலத்தின் வேகத்தோடு ஓடமுடியாமலும் ஒதுங்கிப்போக முடியாமலும் அந்தரித்த ஒரு நிலையுடன் ஆரம்பித்த அந்த வருடத்தின் முதல் நாளை, முதல் மணித்துளியை நினைத்துப்பார்க்கிறேன். 

மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையேதுமின்றி வரவேற்க துணிந்த அந்த முதல் மணித்துளியில், எதோ ஒரு புரிந்துகொள்ளமுடியாத உணர்வின் உந்துதலால் சிவாஸ் உடன்   (CHIVAS REGAL) ஆரம்பித்த அந்த வருடம் குறித்த பயம் பதற்றம் எதுவுமின்றி இன்று அந்த வருடத்தினை பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது. 

இந்த சிரிப்பின் பின்னால் பலவலிகள் இருந்தாலும், நல்ல சில  மறக்க முடியாத நிகழ்வுகளும் இருக்கின்றன. 


Wednesday 25 December 2013

என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்...(இது, கதையல்ல. எடுத்துக்கொள்ளலாம் )

     இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு  உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று  பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச  கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை.

Tuesday 24 December 2013

வன்மம் புணர்ந்த பிரியம்.

நேசிப்பின் நிழல்களில் ஒதுங்குதல்
சாத்தியமிழந்த பொழுதொன்றில்
தீப்பிடித்த வடுக்களால்
வேர்களில் சாம்பல்நெடி...

காயங்களையாற்றும் காலம்
இந்தக் காலத்தையும் அனுப்பியிருக்கலாம்..
வறண்ட நிலத்தின் மேல்
திரியும் கருமேகங்கள் போல..

என் தோட்டத்தின் சாம்பல் மீதிலும் பூக்கள்.

நீண்ட தெருக்களை
விலகி நடக்கத் தொடங்குகிறேன்..
காற்றும் ஒளியும் தழுவிப் போகின்றன.
பறவைகளின் பாடல்கள் நெருக்கமாகின்றன
கடல் விரிந்து கிடக்கிறது.

மூழ்கடிக்கவும் மூழ்கிப்போகவும் முத்தெடுக்கவும்
பிரியமும் கடலும் தான்  இருக்கின்றன


நான்
நேசிக்கப்படுகிறேன் !!!

என்
பிரியத்தின் இழைகளில்
வலைபின்னி காவலிருக்கிறது
சுமக்கவியலாத கனத்தோடு மர்ம சிலந்தியொன்று.
இன்னொரு பிரியத்தை கொன்றுவிடுவதற்காக
அல்லது வடித்து விடுவதற்காக...

இப்போது
என் தோட்டத்துப் பூக்களின் கீழும்
செத்துகிடக்கின்றன
வழி மறிக்கப்பட்ட
அல்லது
மறுக்கப்பட்ட  பிரியங்கள்.

Saturday 14 December 2013

எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ

புற்றில் நுழையும் பாம்புபோல
மென்மையாக இறங்குகிறாய்
இரைதேடியோ அன்றில்
உறைவிடம் நாடியோ ?

இழக்காத
அந்தரங்கவேர்கள்  மீதும் சொல்லெறிகிறாய்
இடம்மாற்றவோ அன்றில்
பிரட்டிப்போடவோ ?

மௌனங்களை வென்றுபோக
சலனமில்லாத விழிச்சுழற்சியை  அனுப்புகிறாய்...
என்னை கொள்ளவா
கொல்லவா?

எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ..
அதற்குமுன்
வா ..
இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்..
பின்பொரு முத்தத்தை பகிரலாம்.






Wednesday 27 November 2013

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்..

தோரணங்கள் இல்லை
மஞ்சள் சிகப்பு நீலக்கொடிகள் இல்லை
எழுச்சி கீதங்களும் இல்லை
இது கார்த்திகைதனா
நாங்களும் தமிழர்கள் தானா..

ஒடுங்கிப்போகிறது சர்வமும்,
சவங்களா நாம்.
இத்தனை திங்களாய் என்ன செய்தோம்.

களையிழந்து கொண்ட நிலைதொலைத்து
வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை.
மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும்
பேரிருள் மேவி கிடக்கிறது.
காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது.
நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது.

தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு
எவரெவர் கால்களில் விழுந்தோம்.
ஒப்பாரி வைத்தோம்
எவராவது பார்த்தார்களா ?

வாருங்கள்
சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம்.
வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம்.

விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில்
புல் முளைத்தாலும் புலியாகுமென்று
நடுகல் உடைக்கிறான் .
கண்மணிகள் கண்திறந்திடுமோவென்று
கல்லறைகள் சிதைக்கிறான்.

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?

வாருங்கள்
சுவாசித்து மீண்டும்
வேரிலிருந்து தழைப்போம்.
ஈழத்தேர் இழுக்கும் தினவு கொள்வோம்.

மணியொலித்து
மலர்முகம் பார்த்து
நெய்யூற்றி ஒளியேற்றாத
கார்த்திகை  இது கடைசியாகட்டும்.

Tuesday 19 November 2013

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.

இந்த கணங்களை கடந்து போவது 
எப்படி என்று தெரியாமல்....
கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன்  
வெறுமையை சுமந்தபடி ...

நீ  
உனது பிரியங்களால் 
தின்று கொண்டிருக்கிறாய்.

கண்ணீர் கூடப்  பிரியம் தான்.

கனவுகளை தின்னும்  பூதத்திடம்
மோதுகிற வண்ணத்துப்பூச்சியே,
ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள்
என் அறைகளில் அலைகின்றன..

திரண்டெழும் நீரை மறுப்பதாக
நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு
மௌனித்துப்போவதை விட வேறெதையும்
செய்ய முடியவில்லை என்னால்.

என்ன செய்ய முடியும் என்னால் 
கண்ணீரை துடைப்பதற்கு
விழி துடைக்கும்  சிறுகரத்தினைவிடவா..!!!

அநேக பொழுதுகளில்,
வணக்கத்தில் தொடங்கி
கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில்
மூழ்கிக்கிடக்கிறேன் நீ போனபின்பும்,
ஆற்றுப்படுத்தும் வித்தை தேடி.

எப்படித்தான் ஒப்பனை செய்தாலும் 
உனக்கான
வார்த்தைகளை உருவாக்குவதில் தோற்றுப்போகிறேன்.

தோழியே...
அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.
நீ பறவையாகு...
நாளைய விடியலில்
உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புத் தோழனாக...
அன்று என் மௌனமும் தொலைந்திருக்கும்.



(என் அன்புத்தோழி ஒருவரின் கண்ணீர் என்னை சிதைத்த  கணத்தில் எழுதியது )

Monday 18 November 2013

நிழல் தேடும் நியம்...

திரண்டெழும்  ஏக்கத்தின் கனதி சுமந்த வேர்கள்
நீர்ப்பிடம் தேடியலைந்து
வெடித்துக்கிளம்ப எத்தனித்து
கேவல்களுடன் ஒடுங்கிப்போகிறது.

இந்த
தோட்டத்தின் அந்தரங்க இருளில்
அரங்கேறுகிறது அவலநாடகம்.

வெற்றிடத்தில்
எதிர்கொள்ளவியலாத மௌனம்

உள்ளெழுந்த  விரிசல்களும்
எதிர்பார்ப்புக்களும்
கௌரவவிம்பத்தால் புறக்கணிக்கப்பட
எழுகிறது முடிவற்ற ஈனக்குரல்

இப்போதெல்லாம்  நான் கேட்பது
பரிபூரண சரணடைதல் ஒன்றையே.
காலம் ஒப்பனைகளுடன் கூடிய நேசித்தலை சுமத்துகிறது.

சபிக்கப்பட என் இதயமே,
எந்த விலக்கப்பட்ட கனியை உணவாக்கினாய் ?
மக்கிக்கிடக்கும் எலும்புகள் மீது
இனி எக்காலம் எவரால் கங்கை பாயும் ?

எங்கோ தொலைவில்,
வசந்தகாலக் கனவில் பாடிக்கொண்டிக்கும்
பறவையின்  குரல் சுமந்து தொடுகிறது காற்று.


Monday 11 November 2013

ஒரு குற்றப்பத்திரிக்கை

தன்னைக் கொன்றவனின் 
வாக்குமூலம் ஆராய்தலின் பின்
தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது.

அங்கு,
தன்னைக் கொன்றவனின்
வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது.
தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள்
வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு
எப்படிப் புரிந்திருக்கும் ?

தன்னைக் கொல்லுதல்
மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம்.
மை கரைவது போலவும் இருக்கலாம்.
ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம்.

தன்னைக்கொன்றவனின்
கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை,
அவன் சுமந்திருந்த
தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை.
அவன் உருவாக்கிய
வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை,
ஆனாலும்,
தன்னைக்கொன்றவனைத்
தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல,

அவனுக்கு
அந்த நேரத்தில் தேவையாக இருந்திருப்பது
ஒரு உச்சபட்ச விடுதலை.
அது தன்னை
தன்னிலிருந்தும்
பிறரிலிருந்தும்
விடுவித்துவிடுமென்று  நம்பியிருக்கலாம்.

தன்னைக் கொல்லுதலூடாக
அவன் தன்னை விடுவித்தாலும்
நீங்கள் உங்கள்
குற்றங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.



Sunday 3 November 2013

வெள்ளாடையோடு வருகிறாள் வாள்சுமந்த தேவதை

தேச ஒருமைப்பாடென்று கூடிக்
கற்பழித்தவர்கள்  எங்கள் வாய்கால்களில் 
தங்கள்  குறிகளை 
கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள் மன்றாடுவோம்.

கழுகின் நிழல்களில்
வாள் சுமந்த  நீதிதேவதை
வெள்ளையாடையோடு  வருகிறாள்

உயர்ந்த ஜனநாயகநாடும்
காந்தியச் சக்கரங்களால்
சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும்
ஏறி வருகிறது.

காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள்.
அல்லது
விருந்தில் இருந்திருப்பார்கள்.
இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வண்ணாத்துப்பூச்சிகளையும்
மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த
கதைகளை சொல்லுவோம்.

கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற
மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற
கதைகளை சொல்லுவோம்.

ஒலிவ் சுமந்த வெள்ளைப் புறாக்களை
அம்பால் துளைத்த வேடன்களின்
கதைகளை சொல்லுவோம்.

சிதைந்த உடல்களிலும்
அழுதுவந்த நடைபிணங்களிலும்
குறிபுதைத்துக்  கொக்கரித்த யந்துகளின்
கதைகளை சொல்லுவோம்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வட்டமேசைகளில் வர்ணக்கொடிகளின் கீழ்
கோப்புகளில் தேடுவார்கள்.
எலும்புகளையும் மண்டையோடுகளையும்
கிழிந்த ஆடைகளையும் வைத்து
விவாதிப்பார்கள்.

பின்
திரைமறைவில்
சமாதான தேவதையின் தட்டுக்களில் 
பாலச்சந்திரன்களின்
இசைப்பிரியாக்களின் தசைதுண்டுகளை  நிறைத்துவிட்டு
விலை பேசுவார்கள்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
தங்களின் தேச நலன்களை தவிர
எங்களுக்கும் எதுவும் புரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

Friday 1 November 2013

ஒரு தீப வலி

தீபாவளி...
 எத்தனை தீபாவளிகள் கடந்துவிட்டன..
அன்றும் ஒரு தீபாவளி நாள் தானே.
பச்சை உனக்கு பிடித்த நிறம். எனக்கு சிகப்பு.
அன்று நீ தேவதை போலத்தான், இல்லை தேவதையாகத்தான் தெரிந்தாய்.

யாருக்குத்  தெரியுமடி ?
அன்றுமுதல் எனக்கு தீபாவளி இல்லை என்று.
அந்த தீபாவளி மட்டும் வராமலேயே போயிருந்தால்...
அல்லது,
நீயாவது வராமல் போயிருந்தால்...
நானும் என் நண்பர்கள் போல ஒரு சராசரியாக
இன்று கொண்டாடிக்கொண்டிருப்பேன்.

Thursday 31 October 2013

தவிப்பு...

வானம் தீப்பிடிப்பதற்கு சற்று
முன்னான கணத்தில்தான்
அது நிகழ்ந்தது.
முன்னெப்போதுமில்லாத வாசத்தில் 
பெய்திருக்கிறது நேற்றிரவு மழை.
இந்த சந்திப்பைப்போல....
இறகு விரித்து தேவதைகள் கடக்கின்றன
தலைக்கு மேலே..
இதயத்துக்கு  உள்ளே...
இலைகளின் குரல்கள் சுமந்து வருகின்றன
மலர்களின் மகிழ்ச்சியை.
நான் தேடத்தொடங்க,
நீ கடந்து விட்டிருந்தாய்.
வானமும் தீப்பிடித்துவிட்டது.
வேர்க்கிறது கழுத்தில், கண்ணில்.
மரமும் அமைதியாகிவிட
கூடு காத்திருக்க தொடங்குகிறது.
சென்ற பறவை வருமா ?

Sunday 20 October 2013

நிறமிழந்து போவேனோ

பார்த்தலையும்,
புன்னகைத்தலையும்,
நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது.

அரவணைப்புகான ஏக்கத்தைதையும்
இன்றின் ஏமாற்றத்தையும்
சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது.

வீடுகளில்,
வேலைத்தளங்களில் - இருந்து
ஏதாவதொன்றை காவி வருபவர்களையும்,
ஒரு சீக்கரெட் , கபே வழியாக
ஏதோவொன்றை  இறக்கி வைக்க முயல்பவர்களையும்
சந்திக்க வேண்டியிருக்கிறது.

லெதர் ஜக்கெற்றுக்களும்
மப்ளர்களும் மனதையும் மூடிவிட
ஐபோனும் கூலிங்கிளாசும்
பொறிகளையும் தின்றுவிட
கொட்டடி முதல் கொடிகாமம் வரை
உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும்
பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும்  ஈபிள் கோபுரத்திலும்
நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்
ஒரு ஆபிரிக்கனை,
ஒரு துனிசியனை,
ஒரு ரூமேனியனை,
கள்ளன் கறுவல் என்று திட்டிக்கொள்பவர்களையும்
சகிக்க வேண்டித்தான் உள்ளது.

இந்தப் பயணத்தில் ...
முகமூடிகள்  மட்டுமல்ல
முகமில்லதவர்களும் பக்கத்து இருக்கைகளில்,

ஒரு காலத்தில்,
வல்லைக் காற்றையும்
வல்லிபுரக்கோவிலையும்
தாவடிச் சுருட்டையும்
கீரிமலைக் கேணியையும் சுகமென்றவர்கள்,
மாத விடுப்பில் பார்த்த
சுவிசும், பார்சிலோனாவும், லூட்சும் போதும் என்கிறார்கள்.
வலைபின்னி வலைபின்னி
வாழ்வினை இரையாக்கி கொள்கிறார்கள்.

இப்போது,
எனது பயமெல்லாம்
இவர்களைப்போல,
நானும் ஒரு அகதி என்பதை மறந்துபோவேனோ ?

Tuesday 15 October 2013

நாளை நானும்...

அடங்கிக்கிடக்கிறது.
என்றும் இப்படி கிடந்ததில்லை
இறகுகோதும்  ஓசையாவது கேட்கும்.
எதுவுமில்லை.

நேரம் அறியக்கூட  பர்ப்பதுண்டு
காலம் தப்பியதில்லை
ஒருபோதும்.

காலம்...??

எங்கே போயிருக்கும்,
இரைபோதாமல்
இன்னும் தூரம் போயிருக்குமோ
இணைகூடி இடம் மாறி இருக்குமோ
இரையாகி இருக்குமோ

இறகு உருத்தியும்,
எச்சமிட்டும்,
சுள்ளித்தடிகளை விழுத்தியும்,
தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும்,

எங்கே
போய் தொலைந்திருக்கும்.
"சனியன்" என்று வாய்விட்டு
திட்டவேண்டும் போல ஒரு உணர்வு.

காலம்
காத்திருப்பை சேமிப்பதில்லை.

சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும்
தவறி அலைகின்றன.
எச்சங்கள் காய்ந்து  துகளாகி
இல்லாமல் போகின்றன.
சந்தங்களால்,
குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து
வெறுமை  பரவத்தொடங்குகிறது.

பரவுகின்ற  வெறுமை
தின்னத்தொடங்குகிறது
ஒவ்வொன்றாக....
நான்,
இழந்து கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக அந்த
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை.

நாளை,
நானும் கூடு திரும்பாவிட்டால் ...

Tuesday 8 October 2013

மீட்பர்களின் வருகைக்காக.......

எஞ்சி இருக்கும் 
உடலங்களையும்  அரிக்கத்தொடங்கிவிட்டது  
வார்த்தைகளால் வளைத்த கூட்டம்,

புதிய ஏற்பாடு என்றும்,
மீள்ந்தெழல் என்றும்,
அறையப்பட்ட ஆணிகளை
அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும்
செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர்.

நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய,
மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும்
தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும்
அவல ஓலங்களையும் கடந்து,

நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில்
குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும்
இறந்தவர்களின் உறுதிகளால்
இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும்
அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து,

எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து
குறிகசக்கி பல்லிழிப்பவனையும்,
சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து,

தோற்றுப்போனாலும்,
நேற்றுப்போனவர்களின் நினைவுடன்
வாழ்தலின் விதிஎழுதவென்று தானே மைகொண்டோம்.

எம் வாசலில் எம் வயலில்
எம் கோவிலில் எம் ஊரில்
நாமேதான் இருக்கவேண்டும்
நாமாகத்தான் இருக்கவேண்டும்.

புதிய ஏற்பாடு செய்தவர்களே...
மீழுகை அறிவிப்பு செய்தவர்களே ...

எங்களின் முள்ளந்தண்டுகளை உருவி
தீ மூட்டி இருக்கிறீர்கள்
நீங்கள் குளிர்காய...
எங்களின் மூச்சுக் காற்றுக்களை விற்று
செங்கோல் ஏந்தியிருக்கிறீர்கள்
நீங்கள் கோலோச்ச...
எங்களின் ஏக்கங்களை கடன் வாங்கி
உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்
நீங்கள் உயிர்வாழ...

பெருவெடிப்பின் அவலம் சுமந்து
கொப்புளிக்கும் குருதியடக்கி
கொலையுண்டும் காணாமலும் போனவர்களின்
கடைசி மூச்சினை உள்வாங்கி
அமைதியாய் கிடக்கிறது தரவைகளில் ஆக்காட்டிகுருவிகள்

அவைகளுடன்
மக்களும் இந்த
தேசத்தின் தெருக்களில் இன்னும் 
காத்திருக்கிறார்கள்...

Monday 30 September 2013

நாளொன்றின் வெற்றிடத்தில்.

மகரந்தங்களின் கண்ணீரும்
பருவம் தப்பிப்போன
பாலணுக்களின் திட்டைக்களும்
நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில்,

சுடர் தின்ற விட்டிலின் கனவுகள்
கருகி பரவுகின்றன

அழகோடு இயைந்த நிலவினைப் புணர
தேடியலைகிறான் சூரியன்
இரவினை கொன்றும் பிறக்கிறது
இரவும் நிலவும்.

இலைகளை வெறுத்த கிளைகளை
காத்திருக்கின்றன,
பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக,

சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின்
மடிகள் கறக்கின்றன
ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு,

அன்பு...
ஒருவர் மனம் நெகிழும்படி
மற்றொருவர் வெளிப்படுத்தும்
பாசமும் நேசமும் நட்பும் என்று
தெளிவாக வரையறை செய்கிறது அகராதி.

அநேக நாக்குகளில் வழிகிறது
துர்நாற்றம் சிலவேளைகளில்
விசமாகவும்.

அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும்
விடைகளை சுமந்து  அலைகிறான்
கேள்வியை தேடி
மனிதனொருவன்.

இப்படிதான்
நிறைந்து போகிறது
நாளொன்றின் வெற்றிடம்.

Monday 23 September 2013

கசியும் வேர்கள்

வேர்களில் கசியும்
நேசிப்பிற்கான  ஏக்கத்தினை
வன்மத்தோடு புறந்தள்ளி
இலைகளையும் மலர்களையும்
வருடிச்செல்லும் இந்த பிரியங்களை
புரிந்துகொள்ள இயலவில்லை.

இப்போதெல்லாம்
வெற்று ஒலிகளால்
ஊதப்படுகிறது பிரியங்கள்
ஒப்பாரிகளையும் ஓலங்களையும்
விதைத்துவிடுவதே அதன்
அதிஉன்னத கற்பிதமாகி போகிறது.

அடைய எதுவுமில்லாத நாளொன்றினை
கடக்கும்  அவலத்துடன்
எதிர்கொள்ள வேண்டியதாகிறது
இன்றைய பிரியங்களை

அவசரத்தில்
துப்பிவிட்ட பிரியங்கள்
படுக்கையெங்கும்  சிதறி கிடக்கிறது.

இனியவை ஒன்றுகூடி
வேட்டைக்கு கிளம்பலாம்

மனதை வருடி மென்மையாக
கொல்லத்தொடங்கலாம்.
நரம்புகளை சீண்டி
வக்கிரங்களை பரப்ப தொடங்கலாம்
கரங்களில் பயணித்து
இணைவுகளை தகர்க்க தொடங்கலாம்
வேர்களில் புகுந்து நேசிப்பினை
வறட்சியடைய வைக்கலாம்

எதுவாக இருந்தாலும்  இந்த
பிரியங்களை சிந்துவோர் மீதும்
எழுந்துவிடுகிறது
புரிந்துகொள்ளவியலாத ஒரு பிரியம்.

Sunday 15 September 2013

காலம் எனதாகும்........

வாழ்தலின்  மீதான கனவை
தடயங்களின்றி உண்டு செரிக்கிறது
காலவேள்வியின் பெரும் தீ

தரித்த கருக்கள்
இமையொரங்களால் கசிந்து
இறந்துகொண்டிருக்கின்றன ..

சுவடுகளை உருவாக்கும்
தன்னெழுச்சியில் எழுந்த பாதங்கள் 
குத்திட்டு கிடக்கின்றன.

கால வேள்வி 
வாழ்தலின் மீதான கனவுகளை  
உண்டு செரிக்கிறது.

ஆகுதியாகிப்போன கனவுகள்
ஒருநாள்
வாழ்வின்  கனதி சுமந்து
பெருமழையாகிப் பொழியும்.

தாழிகளில் நிறைந்து
வன்மத்தோடு வழிந்து ஓடி.......

கனவுகளை தின்ற வேள்வியின்
சாம்பல் மேடுகளில்
பூத்துக்கிடக்கும் காளான்களை மகிழ்விக்கும்
துகள்களை உயிர்ப்பிக்கும்.

வண்ணமயமான
அந்தத் துகள்கள் ஒன்றாகி
திசைகளை கடக்கும் பறவையாகி எழும்.

அப்போது
காலம் எனதாகி இருக்கும்.


Friday 6 September 2013

காலம் தின்ற பாசங்கள்.......!!!

         யாரும் தன்ர கதையை காது கொடுத்து கேக்கினம் இல்லை என்ற இயலாமையை   மெல்லிய முனுமுனுப்பால் ஒருத்தருக்கும் கேட்டுவிடக்கூடது என்ற கவனத்துடன் கொட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி. என்னதான், தான் புறுபுறுத்தாலும், யாரும் தன்னை கண்டுகொள்ளப் போவதில்லை என்ற உண்மை கண்மணிக்கும் புரிந்திருந்தது. இருந்தும், அவளால் புறுபுறுப்பதை விட்டு விட  முடியவில்லை.        
                                
  புறுபுறுத்துக்கொண்டே வீட்டின் உற்புறத்தை எட்டிப் பார்த்தாள். ஒரு பேத்தி ரிவியிலும், மற்றவள் கணணியிலும் தங்கள் தலையை புதைத்துக்கொண்டிருத்தார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை உதுகளை வேண்டிகொடுத்து பிள்ளையளைக் கெடுத்து வச்சிருக்கிற தாயையல்லோ சொல்லணும், உதுகளை  அடிச்சு கலைக்கனும் ஓடிப்போய் விளையாடுங்கோ எண்டு, கண்டறியாத கரண்டு ஒண்ட கொடுத்து பொடியள் உதிலேயே கிடக்குதுகள். என    தன்மட்டில் கதைத்தபடி திரும்பியவள், கட்டிலில் தலையணைக்கு பக்கத்தில் கிடந்த வியாழன் மாற்றம் என்ற புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.

Sunday 1 September 2013

நாங்களும் துரோகிகளே..................

இத்தழிந்து போய்விடவில்லை
என் இனத்தின் நம்பிக்கை.

கொழுந்தெறித்து கிளைபரப்பிய
இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே
பார்......

செத்துவிடவில்லை எங்கள் வேர்களில்
இன்னும் நம்பிக்கை.

என்ன செய்யப்போகிறாய் இனி....

எங்களை
கொன்ற கதையை
யார்யாருக்கோவெல்லாம்
வென்ற கதையாக சொன்னாய்.....

எங்கள்
பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை
மாலை புனைந்து கொண்டாடினாய்.....

எங்கள்
மகவுகளின் நெஞ்சுகளில்
நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு
மண் வணங்கி மகிழ்ந்தாய்.....

உனக்கான காலமென்று ஒன்றிருந்தால்
எமக்கான காலமொன்றும் வரும் !
மீண்டும் வரும் !!

***********************
காலம் திரும்புகிறது.

நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள்
குருவிச்சியும் இனி வரக்கூடும்
வன்னியன் குதிரையின் காலடியும் கேட்கலாம்.

நாச்சியார் கோபம் இனி
நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.
எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.

வீரையும் பாலையும் நிலம் பிளந்து
வான்நோக்காது போனதுமில்லை,
வீரமும் வேகமும் கொண்டவன்
நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.

காலம் திரும்புகிறது.

வல்லையிலும் ஆனையிறவிலும்
கண்டல் காடுகளில் இருந்து எழுகிறது
பெயர் தெரியாப்பறவை.

தொண்டைமானாற்றிலும்
வளுக்கியாற்றிலும் மீண்டும் ஒலிக்கிறது
துடுப்புக்களின் ஓசை.

பூநகிரியிலும் கல்லுண்டாயிலும்
சன்னதம் கொள்கிறது காற்று
தேவன் குறுச்சியிலும் வீரமாகளியம்மன்  திடலிலும்
புறப்பாட்டின் குலவை எதிரொலிக்கிறது.

காலம் திரும்புகிறது.
*************
தாயின் கண்ணீரின் கனதியை
கரங்களில் ஏந்ததுணிந்தவள்
எப்படி சுமப்பாள்?
கண்ணீரின் காயாத பிசுபிசுப்பை
எங்கே துடைப்பாள் இவள்.?

என் குழந்தையே.....
துள்ளி விளையாடும் வயதினில்
உன்னையும் இங்கழைத்தது
எங்களின் விதியோ ?

எழுதுகோல் சுமந்து பள்ளிசெல்லும் நேரத்தில்
படம் தந்து ரோட்டில் நிறுத்தியது
எங்களின் இயலாமையோ ?

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட
எமக்கின்றிப்போனதே
மரணிதவர்களா நாம்?

மன்னித்துவிடு மகளே
உனக்கு முன்
நாங்களும் துரோகிகளே......





Sunday 18 August 2013

முடிவே தலைப்பு.........

நண்பனை பெற்றுக்கொள்ளுதல்
என்பது
குறியீடுகளால்
குறியிடமுடியாத  ஒன்றிணைவு.

காலம் கரங்களை தரும்.
கரங்களுள் காணமல் போவது
மனதின் சுரங்களை பொறுத்தது.

நண்பனை பெற்றுக்கொள்ளுதல்
என்பது
வரலாறுகளால்
வரையப்படாத அனுபவக்கீறல்.

இடங்கள் நெருக்கங்களை தரும்.
நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது
நேசிப்பின் வேர்களை பொறுத்தது.

ஒரு நண்பன்
ஒரு பறவையைப்போல
ஒரு மழையைப்போல
ஒரு புலர்வைப்போல
ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும்.

அவனின் நட்பு
மாலையாக இருக்கவேண்டும்
கழுத்தில்

நீண்ட மனவெளிகளை....
நீண்ட மௌனங்களை.........
பயமுறுத்தும் சில பொழுதுகளை........
ஒதுக்கும் சில சடங்குகளை.....
கடக்க உதவியும்,
முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி.

எப்போதும்,
நல்ல நண்பனை பெற்றுக்கொள்பவன்
நல்ல நண்பனாக இருப்பவனே.

நானும் நீயும் ....................!!!!!!!!!!


Thursday 8 August 2013

மீளும்மென் முப்பாடன் பாடல்...........!!!

முப்பாட்டனின் பாடலும் அவனுக்கு
முன்னான ஆதிமுந்தையோனின் பாடலும்,
எனக்கு கேட்கிறது.

வேட்டையும் வேட்கையும் 
வேளாண்மையும் போதுமென,
கூடில்லாத கூட்டமாக  நகர்ந்த
ஆதிமுந்தையோனின் நிலாப்பாடலில்...

அடங்காத வீரமும் 
திடங்கொண்ட தோள்களின் தீரமும்
முடங்கிக்கிடக்காத விவேகமும்
தடங்குலையாத வேகமும் கேட்கிறது.

சீரான காலடிகளும் 
குதிரைக் குளம்படி ஓசைகளும்
காற்றை கிழிக்கும் வன்ம பிளிறல்களும்
ஒளிபட்டு தெறிக்கும் வேல் முனைகளும்
குருதி வழிந்து உயரும் வாள்களும்
பொருதி முடித்த களத்தே முனகும்
பேய்களும் நாய்களும் நரிகளும்
தெரிகிறது அடுத்தவன் பாடலில்,

பாடல் கேட்கிறது
மென்மையாக மெல்லியதாக
சம நிலத்தின் பயணிக்கும் காற்றுப்போல.....
பாடல் கேட்கிறது........

பாடல் கேட்கிறது
ஒரே இராகத்தில் வேறு வேறு குரல்களில்
நீளமாகவும் கட்டையாகவும்
பாடல் கேட்கிறது.

அலையோசைகள் கேட்க
துடுப்போசைகளுக்கிடையில்
மீண்டும் தொடர்கிறது  பாடல் உச்சஸ்தாயியில்.
கொற்றவையின் பூரிப்பில்
எல்லைமீறி கேட்கிறது.

விழி மூடிக்கேட்கிறேன் முப்பாட்டன் பாடலை.
விரிகிற கனவில் தெரிகிறது பெரும் களம்
கரவொலிகளும் காதல் கலப்போலிகளும்
உறவுகளின் உணர்வொலிகளும்
பக்திபண்சுமந்த இசையொலிகளும் கேட்கிறது.

உடுக்கையும் பறையும் சிலம்பும் கேட்கிறது
உடல் சிலிர்க்கும் குலவையும் கேட்கிறது
மதங்கொண்ட மார்புகள் மோதுமோலி கேட்கிறது
கொங்கையர்  மோக சிணுங்கள் கேட்கிறது.

கடக்கிறது முப்பாட்டனின்
முந்தையோன் பாடல்

கொஞ்சம் கொஞ்சமாக.....
தொடர்கிறது
என் பாட்டனின் பாடலும் அப்பனின் பாடலும்.
வரலாற்றை மீட்ட
பாட்டனும் அப்பனும் வரலாறாகிப்போக,
பாடல் மட்டும் தொடர்கிறது.

இதோ என் பாடல் கேட்கிறது...........

தலைகுனிந்து தளர்ந்த குரலில்
விலைபோய் இனம்விற்ற குரலில்
இடம் விட்டிடம் மாறி அலைந்த  குரலில்
அழுதும் தொழுதும் விழுந்தும் தளதளத்தகுரலில்
முன்னெப்போதுமில்லா இழி குரலில்கேட்கிறது

என் பாடல்
எனக்கான பாடல்
என் காலத்துக்கான பாடல்
கடந்து போகும்.-நாளை
விடியலின் கீதத்தோடு
என் மகனின் பாடல் வரும்
அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் பாடலை.
ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.

Sunday 28 July 2013

கா(தல்)ல மாற்றம்..........

காற்றும் வறண்டு கிடக்கும்
இதுபோன்ற ஒரு கோடையில் தான்
உனை பிரிந்தேன்.

உனைப்பிரிந்த அந்த காலம்
புல் நுனிகள் கருகிய அந்த காலம்
காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது.

அன்று,
உயிப்பூவிதழ்களின் சாயங்களை
வெளுறவைத்த
பெரும் கோடையின் கோபம்
நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........

இன்று,
விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம்
தளம்பல்களை தந்தாலும்
கோடைக்கு முன்னான அந்த
இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன..........

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில்
மக்கிக் கிடக்கும்
சிறுவெண் நண்டுக்கூடுகளாய்
காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,

எனக்குத்தெரியும்
இருந்தவரை
நல்ல காதலியாக இருந்தவள் நீ.

எனக்குத்தெரியும்
பிரியும்வரை
அன்பை பொழிந்தவள் நீ

எனக்குத்தெரியும்
அனல்சுமந்த பெருமூசுக்களால்
நீ தீமூட்டப்பட்ட அந்த கோடை காலமும்,

 உனக்கு தெரியுமா?
இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள்
தவறியும் அந்த இளவேனிற்காலம்
உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது
என்பதாக இருக்கிறது என்பது..........


Monday 15 July 2013

உருவம் இழந்த வீடும்.........................

எப்படி அழைக்கப்படும்
நானில்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்.........

என் பெயரால் அழைக்கப்படமுன்
அண்ணாவின் பெயரால்,
அப்பாவின் பெயரால்,
அம்மாவின் பெயரால்,
அம்மம்மாவின் பெயரால்,
அழைக்கப்பட என் வீடு.........

எப்பவோ துளைத்து
கறல் ஏறிய சன்னங்களையும்,
எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய
வளைமரங்களையும்,
அண்ணாவை தொடர்ந்து
எனது கீறல்களையும் சுமந்த
வைரமரக்கதவுகளையும்,
மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து
மங்கலமாய் நின்ற  தூண்களையும்,
சுமந்த என் வீடு.........

எப்படி
அழைக்கப்படும்
யாருமில்லாத இன்று.

எல்லையோர ஒற்றைபனையும்,
வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும்,
செம்பருத்தியும் நித்தியகல்யாணியும்
நாலுமணிப்பூச்செடியும்
முற்றத்து மண் அள்ளி
கொட்டிஉலவிய காற்றும்
உறைந்துதான்போய் கிடக்குமோ?
நானிருந்த வீட்டில்,

நிசப்த
சூனிய சூழலை கடந்து
காகங்களும் கரியவால் குருவிகளும்
ஓரிருமுறை வந்து போகலாம்.

பூனைகளும் நாய்களும்
என்றாவது இரைதேடியோ
அன்றிலொரு
மறைவிடம் தேடியோ வந்து போகலாம்.

இதுதான்
அவனின் வீடு என்று
ஏதாவது பழைய நினைவுகளுடன்
யாரவது நண்பர்கள் கடந்து போகலாம்.

தாகம் தீர்க்கவோ
குறைந்தது,
முகவரி தேடியோ யாரவது கதவை தட்டி
ஏமாந்திருக்கலாம்......

யாருமில்லாத எனது வீடு
உருவத்தால் இன்னும்
வீட்டைப்போலதான் இருக்கிறது.
உணர்வுகளை இழந்த
ஒரு தேகத்தைப்போலத்தான் கிடக்கிறது.

இங்கும்
பூட்டிய வீடுகளை கடக்கையில்
எனது வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது.
கூடவே
வீடைப்போல சீரழியும்
இந்த வாழ்க்கையும்.



Monday 1 July 2013

எனக்கான பாடல்...........

இது எனக்கான பாடல்.
எனக்கான இந்த பாடல்
உங்களுக்கான அடையாளங்களை
சுமந்திருக்கலாம் .........
ஆனாலும் -இது
எனக்கான பாடலேதான். 

தரவையிலும் தரிசுநிலத்திலும் 
பாடிக்கொண்டிருக்கும் 
ஒற்றைப்பறவையின் பாடலொன்றை
ஆழ்ந்து கேட்டிருந்தால்,

ஆளரவமற்று 
வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் 
பெருவீட்டில் அமைதியோடு 
முடங்கிக்கிடக்கும் 
நாயொன்றின் விழிகளை 
கூர்ந்து பார்த்திருந்தால்,

கனிநிறை மரத்தில் கிளைதாவி 
குரலெடுக்கும் அணிலொன்றின்
தவிப்பின் காரணத்தை 
ஒருநாளாவது தேடியிருப்பின், 

எனக்கான இந்தபாடலின்
நியமம் புரிபடக்கூடும்.
இல்லையேல்,

ஓசைப்பிணைப்புக்களாலும் 
வார்த்தைச்சிக்கல்களாலும்
உணர்த்தப்படப்போவது 
எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு
எனது பயணத்தைப்போல.......

அர்த்தச்செறிவுகளை தேடி
அங்குலமங்குலமாய் அலசி 
அடையாளம் கண்டுகொள்ள முயன்றாலும் 
தெரிந்துவிடப்போவதில்லை உங்களுக்கு 
எனது  இருப்பைப்போல..... 

இந்த பாடலின் முடிவில் உங்களுக்கு 
எதுவுமே இருக்கப்போவதில்லை
எனது வாழ்க்கைப்போல............ 

இருந்தாலும்,
வெறுப்புக்கள் உமிழ்ந்த
இருப்பினை சுமந்த
எனக்கான பாடல் 
உங்களிடமிருந்தொரு பெருமூச்சை 
பரிசாக கேட்கலாம்.
மறுத்துவிடாதீர்கள்..........

Monday 17 June 2013

நியமம்.....

ஆலாபனையொன்றின்
சிதைவுகளிலிருந்து  எழுகின்றது
சீரான முனகல் ஒலியொன்று
இன்றைய  பொழுதுகளில்,

கரிய இருளூடு
அந்தரித்தலையும் மெல்லிய
வெண்மையொன்றை போல,

நீண்ட அமைதிகளை
ஊடறுத்து ஒலித்தோயும்
தெருநாயொன்றின் ஊளையைப்போல,

வைகறையொன்றை நோக்கி
தவமிருக்கும் ஒரு
பறவையின் பசியைப்போல,

நிகழ்த்திப்போகிறது
உணர்த்தமுடியாத
எதோ ஒன்றை,

மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில்
எழும் அச்சங்களை
தொலைக்கும் அபயகரமொன்றின்
ஓங்கார ஒலியை,

தடுக்கமுடியாத
ஊனங்களை  கடக்கும்
யாதார்த்த கணங்களில்
தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை,

எதிர்பார்த்து கிடக்கிறது
ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள்.
இருந்தபோதும்....................

ஆலாபனைகளூடான
நீடிக்கும் அந்த ஒலிமட்டும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
எல்லாவற்றையும் மீறி........


Tuesday 11 June 2013

இது கோழிகளின் கதை......... (உருவகம்)

        கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம்  கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக இருந்துகொண்டு அந்த வளவிலேயே கிடைத்த உணவுகளை உண்டு வளர்ந்தும் வந்தது. சும்மா கிடக்கிற இடம் தானே என்றும் மென்மையான வனப்பான தேகத்தைபார்த்தும், கவர்ச்சியான கண்களை ரசித்தும், அமைதியாக அரைகண்ணை மூடி  தியானம் செய்யும் அழகையும் பார்த்து கோழிகள், ரொம்பவே நல்லவர் இருக்கட்டும் எங்களுக்கும் இவரால் மோட்சம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டன.
        கோழிகள் எப்போதும் கொத்துப்படுவதும், கத்திக்கொண்டு திரிவதும் கிண்டி கிளறி களைத்துப்போனதும் அப்படியே அங்கினேக்கை  சூடுகண்ட இடங்களில் கண்ணை மூடி சுகங்களை அனுபவித்தும் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தன. வளவுக்குள்ள இடைக்கிடை குரங்கு நரி நாய்  போன்ற  சில விலங்குகளும் அத்துமீறி வந்து தங்கட உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேறிக்கொண்டன. ஒருபக்கம் பூனையும், பூனைக்கு முதலே வளவுக்குள் குடி வந்த கோழிகளுக்கும் மற்ற விலங்குகள் வந்துபோறது கொஞ்சம் பிரச்சனையாக தான் இருந்தது. இந்த இடையில மூன்றாவதாக எப்படி வந்தது என்று தெரியாமலேயே காகக்கூட்டம் ஒன்றும் குடிவந்து சேர்ந்து கொண்டது. கோழி கிண்டுற இடத்திலும், பூனை தட்டி விழுத்துற இடத்திலுமாக தன் தேவைகளை நிறைவேற்றி வளமாக வாழத்தொடங்கியது காகங்கள்.
            நாளும் பொழுதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது. காலமாற்றங்களை சாதகமாக்கிய பூனையும் கோழிகளை சீண்டத்தொடங்கியது. ஆரம்பத்தில் சும்மா சும்மா கோழிகளை பிடித்து செட்டைகளை பிய்ப்பதும் புடுங்குவதுமாக ஆக்கினை செய்யத்தொடங்கி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடித்து கொல்லதொடங்கியது. கோழிகளும் பயந்து நடுங்கி ஒதுங்க தொடங்கியதும்  இரத்த ருசி கண்ட பூனை இன்னும் துள்ளத்தொடங்கியது.
      கோழிகளும் நொந்து நூலாகி, சகோதரகோழிகளை காவு கொடுத்ததும், ஓடி ஓடி ஒளியத்தொடங்கின....கடைசியில் ஒளிய முடியாத நிலையில் எல்லா கோழிகளும் ஒன்று கூடின. ஒரே சத்தமும் ஒப்பாரிகளும் வீம்புப் பேச்சுகளும் வீராவேச கூச்சல்களுமாக ஒன்றுகூடின.  கூட்டத்தில்  யார் தலைமை தாங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் தங்களுக்குள் கொத்துப்பட்டுக் கொண்டன. ஒவ்வொரு கோழியும் தான் தான் தலைவன் என்ற ரீதியில் கூச்சல் போட்டுக்கொண்டன. பூனையை கண்டதும் மறைந்து கொள்வதும் பின் வந்து கொக்கரிப்பதாகவும் நடந்து கொண்டன. நிலைமையை அவதானித்த ஒரு கோழி தீர்க்கமான முடிவிவோடு எழுந்தது. அன்றிலிருந்து அடிவிளத்தொடங்கியது பூனைக்கு. பூனைக்கு அடி விழ அடிவிழ அந்த கோழிக்கு பின்னால் அநேக கோழிகள் செல்லத்தொடங்கின. கொஞ்ச  கோழிகள் பூனையோடு சேர்ந்துகொண்டன.பூனையும் தன்னோடு  சேர்ந்த கோழிகளை தட்டிகொடுக்கொண்டு மற்ற கோழிகளை கெட்டவர்களாகவும் கலகக்காரன்களாகவும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டும் திரிந்தது. அதுமட்டுமில்லாமல்  எந்தப்பக்தால கொத்து விழும் என்று தெரியாமல் தூங்கவும் முடியாமல் ஒரு இடத்தில நிலையாய்  இருக்கவும் முடியாமல் தவிக்கத்தொடங்கியது. கடும் முயற்சி செய்து கோழிகள் பறந்து வந்தும் பூனையை தாக்க தொடங்கின.
     கோழிகளின் கொத்தல் தாங்க முடியாமல் பூனை பக்கத்து வீடுகளில் இருக்கும் விலங்குகளிடம் போய்  முறையிட்டு அழுது தொழுது  உதவி கேட்டு அவைகளையும் அழைத்துக்கொண்டு வந்து கோழிகளை விரட்ட தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சமாக கலைக்க கலைக்க ஒதுங்கிய கோழிகளை கண்டபாட்டுக்கு சிதைத்துத் தள்ளியது பூனையோடு சேர்ந்த அயல் வீட்டு மிருகங்கள்.
கொஞ்ச கோழிகள் காணமல் போயின.....
கொஞ்ச கோழிகள் உயிரோடு புதைந்து போயின
கொஞ்ச கோழிகள் சிதைத்து போயின
கொஞ்ச கோழிகள் பூனையோடு போயின
கொஞ்ச கோழிகள் இயலாமையால் இருப்பை தொலைத்து போயின
கொஞ்ச கோழிகள் தப்பி ஆங்காங்கே போயின........
கொஞ்ச கோழிகள் மானத்தோடு ஓரமாய் போயின.......
                  பூனையோடு கலந்து போன கோழிகள் பாட்டும் கூத்துமாக கொண்டாட்டத்தில் திளைத்தன.
                 கொஞ்ச கோழிகள் கண்ணீரோடு மற்ற கோழிகளுக்காக
வாழத்தொடங்கின.
                அப்பதான் முழிச்ச கொஞ்ச கோழிகள் மீண்டும் கொக்கரித்து கூட்டம் கூடத்தொடங்கின.......................
                பூனையோடு கலந்து போன கோழிகளோடும்  பூனை கொஞ்சம் கொஞ்சமாக தனகத்தொடங்கியது. ஒன்றும் செய்யமுடியாமல் அந்த கோழிகளும் பூனைக்கான தமது கொக்கரிப்பை குறைக்காமல் நீட்டிக்கொண்டது.
               குழுக்களாய் இயங்க தொடங்கிய கோழிகளைப் பார்த்து தலையாட்டிக்கொண்டே இருப்பை தக்க வைத்துக்கொண்டது காகக்கூட்டம்.
                மீண்டும் கொக்கரித்தொடங்கிய கோழிகள் மட்டும் மண்ணை கிளறி கிளறி காட்டி கொக்கரித்துக் கொண்டே பூனைக்கும் போய்வர செம்கம்பளம் விரித்துக்கொடுத்துக்கொண்டிருந்தன.....
                கொஞ்சம் கொஞ்சமாக கோழிகள் சின்ன கரப்புக்கூடுகளை தமது வளவுகள் என்று சொல்லி அதற்குள்ளேயே கொக்கரிக்கத் தொடங்கின.
            பின் அப்படியே
எல்லாம் மறந்து தலையை செட்டைக்குள் புதைத்து உறங்கத் தொடங்கின.
            கோழிகளுக்கு இப்போது  துன்பமே இல்லை என்று கத்தியபடி,  பூனை தன் வாயில் இருந்த கறைகளை நக்கி அழித்துக்கொண்டது.
               (பூனை கண்ணை மூடினால் ......................... கோழிகளும் அல்லவா கண்ணை மூடிவிட்டன)

Tuesday 28 May 2013

நானில்லாத எனது அறையில்............

யன்னலால் எட்டிப்பார்த்து
எக்கத்தொடு மெல்ல திரும்புமோ
நிலவொளி,

நிசப்தத்தால் நிலைகுலைந்து
வெதும்பி வெளியேறுமோ
மலர்தடவிய தென்றல்,

நிழல்கரங்களால்
நிலம் தடவித் தவிக்குமோ
தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ
செம்பருத்தி,

மேட்டுக்குள் கடக்கும் எலிகள்
இறங்கி உலாவுமோ,
மேசை லாச்சிகளில்
குட்டிகளை ஈனுமோ,

என்னதான்  நிகழும்
எனது அறையில் !!

சுவரில் மாட்டிய அழகியின் படத்தில்
கூடுகட்டிய வண்டு
ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும்
ஆடை கொழுவியில்
அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி,

கதவில் ஒட்டிய படம்
மக்கிப்போயிருக்கும் -அந்த
கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும்.
மேசையும் கதிரையும் புத்தகங்களும்
தூசுகளில் கிடக்கும்.
மையிறுகி பேனையும்,
தோல்வெடித்துக் காலணியும்,
சக்குப்பிடித்து எண்ணைப் போத்தலும்,
அந்தந்த இடத்திலேயே கிடக்கும்.

இவையும்
நிகழ்ந்திருக்க கூடும்.

யாருக்கும் தெரியாது,
நானில்லாத அந்த அறையில்
என் கனவுகளும்
நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
கண்ணீரின் உவர்ப்பு வீச்சமும்
பெருமூச்சுக்களும்
ஒரு காலடிக்காக காத்திருப்பது !!

Monday 13 May 2013

கானல் உறவுகள்.........

என் விழியே.........
           என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது  அவளின் மனதில்  இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து  சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை  திறந்து பார்த்தாள். "மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது   போல நடிப்பது" என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது.

            தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு  அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள்.  அறையின் புழுக்கமும், பழைய புத்தகங்களை கிண்டியதால் எழுந்த நமச்சல் மணமும், கையில் கிடைத்த கடிதம் இருந்த கொப்பியும் தொடர்ந்தும்  அந்த அறையில் இருக்கவிடாது செய்தன. கொப்பியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில்  வந்தவள் சாய்மனைக்கட்டிலில் தந்தையார் படுத்திருப்பதையும், குசினிக்குள் தாய் பெருமெடுப்பில் சமையலில் ஈடுபட்டிருப்பதையும் கவனித்தாள், சத்தமில்லாமல் பின் கதவை திறந்து வளவுக்குள் இருக்கும் கிணற்றடி நோக்கி நடந்தாள். செழித்து நின்ற வாழைகளும், கொய்யாமரமும், நிழல்களை பரப்பி  நின்றதால் ஏற்பட்ட  குளிர்மை அவளது பதட்டத்தை குறைத்து அவளை ஓரளவு இயல்புக்கு கொண்டுவந்தன.

Sunday 5 May 2013

மாயமானாய் ஓடிப்போகாதேடி............

கண்ணுக்குள்ள
நிக்கிறியே -என்ன (னை)
விண்னுக்குள்ள
தள்ளுறியே,
அடியே......
எ எண்ணத்தில
தீய வைக்கிறியே........

செவ்விதழை
மடிக்கிறியே-என்ன(னை)
செவ்வாயில
புதைக்கிறியே,
கொடியே....
ஏஞ்சிந்தையில புது
சிந்துபாடுறியே...............

ஒத்திவச்ச
காணிய கடக்கயில
பத்தியெளும் பெருமூச்சு-உன்ன
பாக்கையில தோணுதடி!
பொத்திவச்ச
ஆசையெல்லாம்
முத்திவந்து முனுங்குதடி!!


நெத்தி சுருக்கி
நீ பாக்கையில
நெட்டுருகி போகுதடி!
எட்டுவைச்சு பாதகத்தி
நீ நடக்கையிலயென்
சத்திகெட்டுப்போகுதடி!!

மனச சுத்தி
அடிக்கிறியே
மலைய சுருக்கி
சுமக்கிறியே.......
கனவ அள்ளி
தெளிக்கிறியே
கையளவிடை
மறைக்கிறியே.......
ஊன உருக்கி -புது
உருவம் திரட்டுறியே
கானக்குயிலாய்
உருவேத்திறியே...........

சீனமதில் போல
நீளுதடி ஏக்கம்
வீணா போயிடுவேனோ
உள்ளுக்குள்ள வொருதாக்கம்
மாயமானாய்
ஓடிப்போகாதேடி
மயானத்தில என்ன(னை)
விதைக்காதேடி..........

Monday 29 April 2013

தப்பாய்யா இது................!!!


             விரும்பினா படியுங்கோ இல்லாடிலும் தயவு செய்து  படியுங்கோ, நீங்கள் எப்படியும் படிப்பியள் என்று  தெரியும். ஒ, படிக்க தொடங்கியிட்டியள் என்ன, இனி உடன விசயத்துக்கு போகத்தான் வேணும்.

            அது ஒண்டுமில்ல  இண்டைக்கு  ஒரு இடத்தில கொஞ்சம் புத்திமதி சொல்லிச்சினம் அதை கேட்ட நேரத்தில இருந்து கையும் ஒடலை காலும் ஓடலை, எதுக்கு அவர் அப்படி அறிவுரை சொன்னார் என்று தலையை போட்டு உடைக்காதையுங்க போற போக்கில கட்டாயம் சொல்லித்தான் போவன்.

Tuesday 23 April 2013

அன்பில் இழைதல்

ஓசையை
தொலைத்த சொல்லொன்று
தளர்ந்து விழுந்தது காலடியில் .......

மெல்லிய
காற்றில் எழும் சிறகொன்றின்
வலி சுமந்து விழுந்திருக்குமோ?

கிளைகளும்
வேர்களும் வெறுத்த மலரொன்றின்
ஏக்கம் தாங்கி விழுந்திருக்குமோ?

பசியோடு
வலையில் இறந்துபோன  சிலந்தியின்
கோபம் சுமந்து விழுந்திருக்குமோ?

தேடத்தொடங்கினேன்

கனத்த
மௌனசெதில்களின் பின்
பிரியமொன்று விட்டுச்சென்ற
ஈரலிப்பில் மூழ்கிக்கிடந்தது
ஓசையற்று,

என்
இமையோரங்களில்
பிரியத்தின் படிமங்கள்

தின்னதொடங்கியது
ஓசை கலந்த அந்த சொல்
கொஞ்சம் கொஞ்சமாக என்னையும்.

Monday 8 April 2013

நாள் கடந்து விட்டது............

இந்த நாள்
கடந்து விட்டது............

சப்தங்களாலும் விரகங்களாலும்
நம்பிக்கைகளாலும் துரோகங்களாலும்
நிரவிக்கிடந்த,
நாளொன்றாய் கழிந்து விட்டது
இலகுவாக........

சாவுக்குப்பின்னான
விமர்சனங்கள்
மென்மையானவை தான்.
நாளொன்றின் மீதும் கூட,

இழந்துவிட்டதாகவும் 
பெருமைப்பட்டதாகவும்
நாளொன்றின் மீதான
மீளாய்வுகள் மட்டும் தொடரும்
கடந்துவிடாமல்......

கல்லறைகளை
போற்றுவதும் வழிபடுவதும்
வழக்கான வம்சத்தில்_இந்த
நாள்களின் சமாதிமீது
நினைவுமலர்கள்
விழுந்துகொண்டே இருக்கும்

மாயமான் வேட்டையில்
வேட்டையாடப்படும் வேடர்களின்
பெருமூசுக்களும்
ஊனக்குரல்களும்
விடை கொடுக்கின்றன......

பரிணாமத்தின் பழமைகளை
கழுவிக்கொண்டு தொலையும்
இந்த  நாளொன்றில்,

என் குறியிடப்பட்ட
பொழுதொன்றை தின்று
வளர்ந்துகொண்டிக்கிறது
அந்திமத்தை நோக்கி
 எனக்கான காலம்.

இந்த நாள்
இனிவரப்போவதுமில்லை.....................

Tuesday 26 March 2013

என் சுயத்தின் வழியே...............

அவசரப்படும் மனிதர்கள் 
அடைக்கப்படும் முன்கதவுகள் 
அடங்கி கூடடையும் பறவைகள்
அமைதியாகிப்போகும் தெருக்கள் - என 
அந்திகள் அழைத்துவருவன 
அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன,

நழுவிச்செல்லும் கதிர்களும் 
மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் 
ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும்
அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும்
புதர்களின் அரவங்களும்- இந்த 
அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன.

இந்த,
அந்திகள் இருளை மட்டும்
சுமந்து வருவதில்லை
பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும்
பயம் நீங்காத சில  இரவுகளையும் கூட
அழைத்து வந்து விடுகின்றன,

அநாயாசமாய்
அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன
அரவங்களும் ஆந்தைகளும்
புதிரான சில மனிதர்களும். 

என்னவோ தெரியவில்லை........... 
இன்னும்,
அந்திகள் வருவது 
அடுத்த விடியலுக்கு தான்- என்ற 
உணர்வுகள் ஏற்படவே இல்லை!!!

Tuesday 19 March 2013

இனி விரைவில் விடியும்!!!

என் தேசப்பெருநிலமெங்கும்
குவிந்து கிடக்கும்
வெண் சாம்பல் மேடுகள்
புன்னகைக்கின்றன.......
தோழர்களே நன்றி.


காலநீட்சியின் கனவுகள் சுமந்த  வாழ்தலை
ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட
துணிந்த வீரம் கண்டு,
உமிழ முடியாத
பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள்
விழிகள் பனிக்கின்றன............
உங்களுக்காக............

தொண்டைமான் நீரேரியும்
வழுக்கியாறும் -அழகிய
சப்ததீவுக்கூட்டங்களும்
தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன,
சோழமண்டல உறவுகளே
உங்களின் எழுச்சியை,

வல்லைமுள்ளி வெளிகளுக்கும்
பகைபணிந்த ஆனையிறவுக்கும்,
வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம்
வாழ்த்துக்களை பகிர்கின்றனர்
கண்களால் எம்மவர்கள் -அவை
நாளையாவது உங்களிடம் வரும்
என்ற நம்பிக்கையில்.

கருக்கொண்ட மேகங்கள்
எழத்தொடங்கிவிட்டன-இனியவை
கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடும்,
பெருமின்னல் வெட்டும்,
ஆழியை சுமந்துவந்து கொட்டும்
ஒரு பெரும் குளிர்காற்று.

எல்லாளனும்
பண்டாரவன்னியனும்
நந்திக்கடல் நாயகர்களும்
சுமந்த வெப்பம் இனி
மெல்ல மெல்ல குறையும்.
ஈழத்தின் பெரும் தீ பரவும்
உங்களின் வடிவில்,
விரைவில் எமக்கும் விடியும்!!!

Sunday 17 March 2013

பகிரப்படாத அல்லது பகிரமுடியாத .............!!

யாரும் வசிக்காத அல்லது
வசிக்க விரும்பாத அந்தவீட்டின்
அமைதி கொடியது !
மிக மிக வலிமையானது !!

ஓட்டிடைகளில் எலிகளோ,
யன்னல் இடுக்குகளில் பல்லிகளோ,
இல்லாத அந்தவீட்டின் அமைதி
மயானத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது.

கதவுகளில் சிலந்திவலைகளும்
சாவித்துவாரங்களில் மண்கூடுகளும்
கைபிடிகளில் கறல்களும்
சருகுகளுள் மறைந்து கிடந்த மிதியடியும்
சூழ்ந்திருந்த அமைதியை
கோரமாக்கிகொண்டிருந்தன.

கண்ணாடியில்
ஒட்டியிருந்த பொட்டும்
சீப்பில் சிக்கியிருந்த முடிகளும்
அடுப்பின் ஓரத்தில்,
காய்ந்துகிடந்த எண்ணைச்சட்டியும்
வெள்ளைகரித்துனியும்
விளக்கமுடியாத அந்தரத்தை விதைத்தது.
மனதுள் ஊசலாடியது மங்கலாக
ஒரு உருவம்.

அழகியசாமிப்படங்கள்
அபூர்வ சங்கு,மக்கிபோன ஊதுபத்தி
அலங்கரிக்கப்பட்ட அறை
மிக மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது!!

ஒன்றுமட்டும்
இறுதிவரை புரியவேயில்லை,
எதற்காக சாமிஅறையை தேர்ந்தெடுத்தாள்,
தற்கொலைக்கு !!!

யன்னலால் தெரிந்த மாமரத்தின்
உச்சாணிக்கிளையில்
கூச்சலிட்டுக்கொண்டிருந்தது
அணிலொன்று தனியாக

Thursday 14 March 2013

மௌனத்தின் ஒலிக்குறிப்பு.......

கடந்துவிட முடிந்தாலும் 
தொடர்கின்றன -ஒரு 
பகல் நிலவைப்போல
நேசிப்புகளும் காயங்களும்,

சப்தங்களை இழந்த 
சங்குகளாய் வெதும்புகின்றன
இன்றைய பொழுதுகளில் - இந்த 
இதயத்தின் துடிப்புக்கள்..

உருவங்கள் கரைந்து மறைந்தும்
அழிந்திடாத 
நதிக்கரை படுக்கைகளாய்
உள்நிறைந்து போகிறது
நேசிப்புக்கள். 

நேசிப்பின் வர்ணங்கள்
நீர்த்துப்போகாமல் அலங்கரித்து
வியாபித்துப்படரும் கனவுகள்,
பின்னான பொழுதுகளில் 
நேசிப்பையே ஈமத்தாழியாக்கி 
அடங்கிக்கொள்கின்றன
நிதர்சனங்களின் வலிகளை சுமந்து
மௌனமாக,

இந்த 
மௌனங்கள் திரண்டொரு பெரும் 
ஒலிக்குறிப்பாய் எழும்
அது ஒருநாள்  
நேசிப்புக்கான  மரணத்தை  
முகங்களில் அறையும்.



Tuesday 5 March 2013

தொலைக்கப்பட்ட அன்பு...........

கசிந்துகொண்டிருக்கிறது
தொலைக்கப்பட்ட அன்பின் மீதான
கடைசி துளிகளும்.

முதல் சில
நாட்களைப்போலவே இல்லை
இந்த பிந்திய நாட்கள்,

அதீதமான அரவணைப்பை
வெறுத்தொதுக்கும்
மழலையொன்றின்
பக்குவமற்ற நாட்களாய்
கடந்துபோனது முந்தைய சில நாட்கள்.

எல்லை நோக்கி
வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை,
எல்லைகடந்து
வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை,
உணர்த்தியழுதத்துகின்றன
இந்த நாட்கள்.

தொலைக்கப்பட்ட  அன்பு
அழிந்துபோய்விடுவதில்லை - அது
வேர்களில் அடங்கிக்கிடக்கிறது
பின் அதுவே
இலைநுனிகளில்
நீராய் திரண்டும் வருகிறது.

யாரவது ஒருவருடைய
கண்களை பார்க்கும் போதும்,
யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும்,
யாரவது ஒருவர்
கை அசைக்கும் போதும்.
தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதியாகிவிடும்.

அன்பின் மீதான கடைசி துளிகளும்
நாளையொன்றில்
வெளியேறிவிடக்கூடும்.

ஆதலால்,
இப்போதெல்லாம்
எழும் கேள்வி
கடைசி துளிகளும் வெளியேறிய வெற்றிடத்தை
எதைக்கொண்டு நிரப்புவது என்பதே ?



Wednesday 20 February 2013

பிரசவிப்பொன்றை நிகழ்த்துவோம்....

குருதியோடிச் சேறாகி
வறண்டுபோய்
வெடித்துக் கிடக்கிறது
எங்களின் நிலம்,

முளைகருகிச் சருகாகி
புல்பூண்டுகளும்,
மக்கி மண்னேறி மண்டையோடுகளும்
இன்னபிற அவயத்துண்டுகளும்
கறைபடிந்த துணிகளும்
ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன,

ஆந்தைகளும்
ஆட்காட்டிகுருவிகளும் கூட
இடம்தேடி
எங்கோ போய்விட்டன,

கடந்தவைகளை  மறந்து
அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம்.
தழுவல்களும்
கண்ணீரும்
ஒப்பாரிகளும்-என்
சிறுதேசத்தில் மாற்றங்களை
நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன,

இழவு முடிந்த
எங்களின் வீட்டு
சுவர்களிலும் தூண்களிலும்
தங்களின் கழிவுகளை கொட்டிவிடும்
வன்மத்தோடுதான்
வாசல்களில் மேடை போடுகிறார்கள்
கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள்.

அவர்களுக்காக,
சாம்பல் மேடுகள்மீது
செங்கம்பளம் விரித்து சாமரையோடு
காத்திருக்கிறார்கள்
உணர்ச்சிகளை தட்டி வாக்கு வாங்கியவர்கள்.

மழைக்காலத்தின் பூசிகளாய்
எழுந்தோய்கிறது
மனிதஉரிமை பேச்சுக்களும்
காணொளிகளும்,
வலிகளை சுமத்தி தங்கள் வசதிகளை
நிர்ணயப்படுத்திக்கொள்கிறார்கள்
வல்லூறுகளின் சிறகுகளில்
ஒளிந்துகொண்டவர்கள்.

வலி பொறுத்திருக்கும்
இந்த காலத்தில் கூடி
ஒரு கருக்கொள்ளுவோம்!!
உருக்குலைந்த உறவுகளின்
உணர்வுகளை உணவாக்கி
கரு வளர்ப்போம் !!

நாளைய பொழுதொன்றில்,
குருதியோடி
வறண்டு வெடித்த அந்த நிலத்தில்
மீள் பிரசவிப்பொன்றை நிகழ்த்துவோம்!
தேசத்தின் சுவர்களை கட்டியமைப்போம் !!

Wednesday 13 February 2013

காதல் காதல் காதல் போனால் .....(காதல் கலவை இரண்டு)

இருக்கிறதோ......
இல்லையோ .................
தவிக்க வைப்பது
தெய்வமும் காதலும் மட்டுமே.
                  *************
எருக்ககலை நாயுருவி
குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி
இவைக்கே தெரியும் என் காதல்.
************

மொழிபெயர்க்க முடியாமல்
விழிகளால் எழுதும்
வித்தையை எங்கே கற்றாய்?
                        ************

நீ கடந்தபின் பார்க்கும் துணிவை
பார்த்து சிரிக்கிறது-உன்
ஒற்றைப்பின்னல்.
***********

எங்கேயும் எனைபிரிந்து
போய்விட முடியாது உன்னால்,
அங்கே
உனக்கு முதல்
என் கவிதை இருக்கும்.
                      **********










வழியனுப்புதல் நிச்சயம்
பாடையிலா???
பல்லக்கிலா???
**********

என்றாவது ஒருநாள்
உன் பெருமூச்சு சொல்லும்
என் மீதான காதலை.
                       **********
எரிப்பவர்களிடம் கேட்டுப்பார்
ஒரு இடம் எரியாதிருக்கும்
அதுவே
உன் முதல் பார்வை
பட்ட இடம்.
***********
நீ
எங்காவது எப்படியாது
வாழ்ந்துவிட்டு போ.
எப்படி இருக்கிறான்
என்று மட்டும் கேட்டுவிடாதே ...............


Monday 11 February 2013

காதல் காதல் காதல் போயின் .........(காதல் கலவை ஒன்று)

இன்னும் இருக்கிறது 
காதல் கடிதம் 
காதல் ......................!!!

*************

முன்னிரவுகளில் 
நட்சத்திரங்களை தூவிய விழிகளை 
அடித்து சென்றுவிட்டது 
ஆதவக்கரங்கள்.

************

மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது 
சோகப்பாடல்,
சோர்ந்து போய்
உச்சரிக்கிறது உதடு.

***********

அன்று,
இதே நிலா 
நீயும் நானும். 
அதோ நிலா
நீ .................!!!

************

மலர்தாவிய வண்டை 
திட்டினாய்.
வியந்தேன்.............
மனம் மாறி திட்டினாய். 
சிதைந்தேன்.

***********

உன்னை சந்திக்கும் 
அந்த நேரம் கடக்கையில்
நரகம் தெரிகிறது. 
கடந்தபின்.......
மரணம் புரிகிறது. 

*************

கைதவறி பட்டபோது 
தடுமாறிய  மனது நீ 
கரம்பற்றிப்போனபோது 
அனாதையாய் போனது ............

***********

உன்னை பார்த்ததை விட 
உன் வீட்டு 
கதவை, யன்னலை, சைக்கிளை 
பார்த்து அதிகம்.

************

முதல் தரம் 
இல்லையடா என்றாய் 
இரண்டாம் தரம் 
என்னடா என்றாய் 
மூன்றாம் தரம் 
ம்ம்ம்ம்ம்ம்ம் என்றாய் 
அப்போதும் புரியவில்லை 
அதுதான் காதல் என்று.

*************

வளைந்த பூவரசும் 
வேலிக்கிளுவையும்
ஒற்றைத்தென்னையும்
சொல்லிக்கொண்டிருக்கின்றன 
காற்றில் என் காதலை.

**********

நானும்,  
உன் பெற்றோரும்,
ரோடுகளில் காவலிருந்த 
காலங்கள் கடந்திருக்கலாம் ........
காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

***********

திட்டி துப்பிய எச்சிலையே 
தேடித்திரிந்தவன்.
நல்லவேளை 
நீ மட்டும் கிடைந்த்திருந்தால்...................  

Monday 28 January 2013

விடுதலை தீ சுமந்தவனே ..........

வாசல்களில் 
மரணத்தின் வரவுகளை 
கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை .

முன்பெல்லாம் உறவுகள்கூடி
உடலம் சுமந்து 
மயானம் செல்வோம்,
ஊரே மயானமாகிப்போக
இறுதிக்கடன் மட்டுமல்ல 
இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் 
உடலங்களை  கடந்த தினங்கள் அவை.

எங்காவது எமக்காய் 
எம் குழந்தைகளுக்காய்
எம் உறவுகளுக்காய்
ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். 
கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம்.

காற்றும் கடலும் வானும் 
எண்திசைகளும் எரிந்தன
எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும்,
உடலங்களை கண்ட 
நாய்களும் நரிகளும் இன்னபிற 
விலங்குகளும் அஞ்சியோடின,

அப்போதும் வலிகளோடு 
ஏங்கித்தான்கிடந்தோம்.
எதிலியாகி நடந்தோம்.

அறிந்தவன்  நீ எரிந்துபோனாய்.
தோழனே முத்துக்குமார் !!!!
நீ மூட்டியது தீயுமல்ல, 
உன்னையுமல்ல,
இனவிடுதலையின் பெருநெருப்பையும், 
துரோக அரசுகளின் கௌரவ முகத்தையும் தான்.

ஈரநெஞ்சத்தில் 
இணையற்றபெருவீரம் சுமந்த 
வீரத் தமிழ்மகனே_அன்று நீ 
மூட்டிய பெரும்தீயில் 
முகிழ்க்கின்றன ஆயிரம் ஆயிரம் சாதகப்பறவைகள்.
நாளையவை_ஈழ 
விடியலின் கீதம் இசைக்கும்.
அந்த பூபாள அதிர்வில் 
உன் பெயரே ஒலிக்கும்.

Monday 21 January 2013

உயிர் தின்னிகள்


அனுமானங்களை சுமந்து 
பரவிக்கொண்டிருந்தது 
இருளடைந்த சொல்லொன்று. 

உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் 
உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை
ஆதங்க பெருமூச்சுக்களை
ஓரந்தள்ளி, 
வக்கிர நிழல்களை பூசினார்கள்.

பின், 
திசைகளை தின்று வியாபித்த
கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, 
அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள்.
அது நிர்வாணத்தை துகிலுரித்தது.

இருளடைந்த சொல்லின்
மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி
கொண்டாடத்தொடங்கினார்கள்
தங்களுக்குள்.

அவள்
காற்றில் நிறைந்த  
வக்கிரங்களின் வெப்பத்தால்
உருகத்தொடங்கினாள்
கொஞ்சம் கொஞ்சமாக .............!!

Tuesday 8 January 2013

வாருங்கள் பொங்கலிடுவோம்............



நீர் தேங்கி நீண்டு
கிடக்கிறது வயல்வெளி,
தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
நிறைந்துபோய் கிடக்கின்றன,
சிதைந்த வயல்வரம்புகளில்
வெண்கொக்குகளும் காகங்களும் 
இறகுகோதி உலாத்துகின்றன,

கலப்பைகீறாத நிலமதில்
அல்லியும் நீர்முள்ளியும்
மண்டிக்கிடக்கிறது,
உடலங்களை உண்ட மதமதப்பில்.

நெல்லுத்தூத்தல்களும்
அறுவடைக்கால கூச்சல்களும் 
இல்லாத வெளிபார்த்து 
சலித்துக்கடக்கிறது  பருவக்காற்று.

நார்கடகங்களும் சாக்குகளும்
மக்கி மண்னேறிப்போகிறது 
வண்டில் சில்லுகளில் வலைபின்னி 
சிலந்தி கிடக்கிறது.

அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்
கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், 
விலைகென்று வளர்த்த கிடாயும் 
விழியுயர்த்தி மிரள்கிறது.  

காலநிலைப்படி
இது தைமாதம் தான்.
கதிர் அறுத்துப் புதுப்பொங்கலிடும்
புண்ணிய காலம் தான்.

முற்றம் முதல் 
உழுது விதைக்கும் நிலம்வரை 
சிலுவைகுறிகளாய் எச்சரிக்கை பலகைகள்.
எப்படி விதைப்பது?

உற்ற சொந்தங்களும்
பெற்ற மகன்களும் தடுப்புக்களில்,
யார் விதைப்பது?

விதைக்காத போது
எதைக்கொண்டு பொங்கலிடுவது ?

வாருங்கள்,
வித்துக்கள் சுமந்த மண்ணெடுத்து
தீ மூட்டுவோம்
பற்றியெழும் பெரும் தீயில்
இருப்பதைக்கொண்டு
படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.

நாளைய விடியலில்,
சூரிய தேவனின் வருகையோடு
கருக்கொள்ளும்
வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம்.