Friday 4 September 2015

இருள் தின்ற ஈழம்.. -ஒரு பார்வை

நவீன கலை இலக்கிய வடிவங்களுள் கவிதைக்கு  இருக்கும் பெறுமானமானது தனித்துவமானது. தான் சார்ந்திருக்கும் கருத்துருவாக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாட்டு தன்மையினை வெளிக்கொணரும் அதேவேளையில், இயங்குகின்ற தளத்திற்கு  வாசகனை விரைவாகவும் நெருக்கமாகவும் அழைத்தும் செல்கிறது. மனதின் அக புற வயங்களில் அதீதமானதொரு  ஊடுருவலை  நிகழ்த்தி, நிகழ்கின்ற கணங்களை நிறுத்தி, தான் நிகழ்த்தும்  கணத்துக்கு வாசிப்போனை கடத்திச்செல்லும் போதே கவிதையும்  முழுமையடைகிறது.

அதேவேளையில், ஒரு படைப்பாளியின் இயங்கு தளமும், உணர்வுகளும் கவிதையின் உணர்வுகளையும் கவிதையின்  வடிவங்களையும் தீர்மானித்தாலும், அந்த கவிதையூடாக பயணிக்கப்போகும் வாசகனின் தளமும், உணர்வும் அதே கவிதையில் வேறுபல பரிமாணங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறது. இது புதுக்கவிதைகள் கொண்டிருக்கும் விசேடமான ஒரு இயல்பு.