Thursday 19 May 2016

குருதியில் தோய்ந்த சூரியன்

கிளைகள் பிளந்த நெடுமரங்களில்
வீழ்ந்துபடுகின்றான்
எழாண்டுகள் முன் குருதியில்
தோய்ந்த சூரியன்

நிலம்
துயரை சுமந்திருக்கிறது.

காலம்
உதிர்தல் குறித்த அச்சத்துடன்
அவசரமாகக்  கடக்கிறது.

Thursday 28 April 2016

பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?

  
 "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக  மாறவேண்டும் "--பெரியார் 

      தனித்தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன்  ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம்,  நவீனம்  என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி  சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது.

Sunday 17 April 2016

இறந்தவன் எனக்கொள்க

காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து
உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி
இறந்தவன் எனக்கொள்க.

ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின்
மறைப்பில் நீளுமெனது  நிவாணம்
காலத்தால் வாழ்ந்தவன்
எனக்கொள்க,

சாத்தியமேயில்லாத
இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த
இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில்
விழிகளை  திறந்து போட்டிருக்கிறேன்.
கபாலத்தைப் பிளப்பது போலொன்றும்
இலகுவாயில்லை
காலத்தைப் பிளப்பது.
பெயரை அழித்துவிடுதலும்
எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும்
ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை.

நேற்று நேற்றாயிருந்தது
இன்று நேற்றாயிருந்தது
நாளையும்  நேற்றாய்த்தானிருக்கும்.
மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது.
ஆணிகளைத் தூர வீசுங்கள்
உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.


Sunday 21 February 2016

பனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்

தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.  என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன்.  

இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது.  ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன்.  முழுமையாக பார்ப்பதற்காக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன. 

Saturday 6 February 2016

குளிர் வெளியில் எரிந்துழலும் மனது


பாடைக்கம்புகள்  இரண்டையும் எடுத்து வளம் பார்த்து கல்லின் மேல் வைத்துவிட்டு, தலைமாடு கால்மாடு என  இரண்டு இரண்டு கம்புகளாக அளவு எடுத்து வெட்டி சணல்கயிறால் கட்டத்தொடங்குகிறேன். திடீரென பறைமேளச்சத்தம் உச்சத்தொனியில் ஒலிக்க, முகத்தைத் திருப்புகிறேன். கொஞ்சம் மங்கலாக தெளிவில்லாமல் உருவங்கள் தெரிகிறது. வாசலில் கட்டிய வாழைக்குட்டி மட்டும் இலையை அசைத்துக் கொண்டு நிற்பது தெளிவாக தெரிய, பாடைக்கு கட்ட நான்கு வாழைக் குட்டி வெட்டனும் என நினைத்தபடி கத்தியை எடுக்க கையை நீட்டுகிறேன்.  உடல் அசைவினால் கழுத்தில் இருந்து நீர்க் கோடு மெல்லிய வெப்பத்துடன் உருண்டு ஓடியது. உடலெங்கும் ஒருவித கசகசப்பாய் இருக்கவே  கையால் கழுத்தை துடைத்துக் கொண்டே கண்களைத் திறந்தேன். பக்கத்து கட்டிலில் நண்பன் மூச்சினை சிரமத்துடன் விடும் ஓசை  கேட்டது.  தூக்க கலக்கத்துடன் கைப்பேசியில் நேரத்தினைப் பார்த்தேன் அதிகாலை மூன்று மணி.

Wednesday 20 January 2016

இனி எப்படி திரும்பிப் பாராமல் போக முடியும்

மது போதையில்
மாரடைத்துப் போன
பரமேஸ்வரன் நாயருக்கு,
சவரம் செய்து
மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர் போட்டு
கை கால்
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி
உடை மாற்றி
சென்ட் அடித்து
பிரேதத்தை கருநீள பெஞ்சில்
நீளமாக படுக்கவைத்துவிட்டு
கொஞ்சம் அருசியுடன்
வந்தார் அப்பா.

அன்னைக்கு ராத்திரி
வீட்டில
சோறு. பூரா
பொண நாத்தம்.