Thursday 28 April 2016

பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?

  
 "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக  மாறவேண்டும் "--பெரியார் 

      தனித்தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன்  ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம்,  நவீனம்  என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி  சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது.

Sunday 17 April 2016

இறந்தவன் எனக்கொள்க

காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து
உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி
இறந்தவன் எனக்கொள்க.

ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின்
மறைப்பில் நீளுமெனது  நிவாணம்
காலத்தால் வாழ்ந்தவன்
எனக்கொள்க,

சாத்தியமேயில்லாத
இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த
இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில்
விழிகளை  திறந்து போட்டிருக்கிறேன்.
கபாலத்தைப் பிளப்பது போலொன்றும்
இலகுவாயில்லை
காலத்தைப் பிளப்பது.
பெயரை அழித்துவிடுதலும்
எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும்
ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை.

நேற்று நேற்றாயிருந்தது
இன்று நேற்றாயிருந்தது
நாளையும்  நேற்றாய்த்தானிருக்கும்.
மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது.
ஆணிகளைத் தூர வீசுங்கள்
உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.