Sunday 7 May 2017

சன்னங்களை மூடியிருக்கும் கைகளின் மீது ஓங்கி அறையுங்கள்

 ஆயுதங்களுக்கு கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு என் உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது தட்டும் திசையில் மனிதன், நானாக மட்டுமல்ல கடவுளே ஆனாலும்  சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் பேனாவை நம்புகிறேன்
“எஸ்போஸ் (சந்திரபோஸ் சுதாகர், 1975 – 2007)

இந்தக் குறிப்புக்களைவிட வேறு எப்படி எஸ் போஸ் என்ற இலக்கிய செயற்பாட்டாளனை அறிமுகம் செய்து விடமுடியும்.  ஒரு ஊடகவியலாளனாக, பத்திரிக்கை ஆசிரியராக, சஞ்சிகை நிறுவுனராக, எழுத்தாளானாக , கவிஞனாக, போராளியாக என்று ஒரு சட்டகத்துக்குள் அடங்காத இளைஞராகவே  இருந்த எஸ்போஸ்  சிறுகதைகள் கட்டுரைகள் விமரிசனங்கள் நேர்காணல்கள் கவிதை  என இலக்கிய செயற்பாட்டின் அனைத்து பக்கங்களிலும் தன் பேனாவினை பதித்துக்கொண்ட போதிலும் கவிதைகளோடு அதிகம் நெருக்கமானவராவே இருந்திருக்கிறார்.

Tuesday 10 January 2017

நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )

கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த  காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய்  குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது.

இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில்  மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்றுஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில்  சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்தது.