Tuesday 4 December 2018

மீறலும் மீறிச் செல்ல முயல்தலும், மீந்து கிடக்கும் யதார்த்தமும்.

 பச்சை நரம்பு அனோஜனின் இரண்டாவது தொகுப்பு. இதில் பத்து கதைகள் இருக்கின்றன.  போர் நீங்கிய நிலத்திலிருந்து   தன்  கதைகளை எழுதுகிறார்.  சமகாலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவராகவும் இருக்கிறார். தொடர்ந்தும் எழுதி வருகிறார். முக்கியமான  சிறு பத்திரிகைகளிலெல்லாம்  எழுதி இருக்கிறார். சிறுகதைகள் மட்டுமில்லாமல்  கட்டுரைகளும், விமர்சனக் குறிப்புகளும் எழுதுகிறார். 

அனோஜனின் எடுத்துரைப்பு மொழி வாசிப்பவர்களுக்கு  இலகுவானது. எந்த வித சிக்கலையும் ஏற்படுத்தாமல் சரளமான  ஒரு வசிப்பினை தூண்டக்கூடியது. சித்தரிப்புக்களோடு  மிக லாவகமாக நகரும்  தன்மை இவரது கதைகளில் இருக்கிறது. வடிவ நேர்த்தியும் இருக்கிறது. சமீபத்திய வழக்கு போல தேவைக்கு மிஞ்சிய பாலியல் ஊடாட்டமும் கதைகளில் இருக்கிறது. பாலியல் சிக்கல்களை  எழுதிவிடுதல் ஒரு தனிமனிதனின் உள்ளுறையும் உணர்வுகளை எழுதிவிடுதல்தான். அனோஜன் யாரும் எழுதாத, மனிதர்களில் உள்ளுறையும் காமத்தை எழுதிவிடவில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள்  ஆனால் அவர்களிலிருந்து   அனோஜனின்  எழுத்துமுறைமை   வேறுபடுகிறதா  என்பதுதான்  முக்கியமானது.

Friday 27 April 2018

எம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்

  இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும்  மட்டுமல்ல,  இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலத்தொடர்ச்சித்தான்.  இந்த நிலத்தில்தான்  மூவின மக்களும் உணர்வறக் கலந்து வாழ்ந்து களித்திருந்தனர்.  ஆனால் அந்த நிகழ்வு இன்று வெறுமனே  வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும் மட்டுமே  எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம். இதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.