பச்சை நரம்பு அனோஜனின் இரண்டாவது தொகுப்பு. இதில் பத்து கதைகள் இருக்கின்றன. போர் நீங்கிய நிலத்திலிருந்து தன் கதைகளை எழுதுகிறார். சமகாலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவராகவும் இருக்கிறார். தொடர்ந்தும் எழுதி வருகிறார். முக்கியமான சிறு பத்திரிகைகளிலெல்லாம் எழுதி இருக்கிறார். சிறுகதைகள் மட்டுமில்லாமல் கட்டுரைகளும், விமர்சனக் குறிப்புகளும் எழுதுகிறார்.
அனோஜனின் எடுத்துரைப்பு மொழி வாசிப்பவர்களுக்கு இலகுவானது. எந்த வித சிக்கலையும் ஏற்படுத்தாமல் சரளமான ஒரு வசிப்பினை தூண்டக்கூடியது. சித்தரிப்புக்களோடு மிக லாவகமாக நகரும் தன்மை இவரது கதைகளில் இருக்கிறது. வடிவ நேர்த்தியும் இருக்கிறது. சமீபத்திய வழக்கு போல தேவைக்கு மிஞ்சிய பாலியல் ஊடாட்டமும் கதைகளில் இருக்கிறது. பாலியல் சிக்கல்களை எழுதிவிடுதல் ஒரு தனிமனிதனின் உள்ளுறையும் உணர்வுகளை எழுதிவிடுதல்தான். அனோஜன் யாரும் எழுதாத, மனிதர்களில் உள்ளுறையும் காமத்தை எழுதிவிடவில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள் ஆனால் அவர்களிலிருந்து அனோஜனின் எழுத்துமுறைமை வேறுபடுகிறதா என்பதுதான் முக்கியமானது.