இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும் மட்டுமல்ல, இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலத்தொடர்ச்சித்தான். இந்த நிலத்தில்தான் மூவின மக்களும் உணர்வறக் கலந்து வாழ்ந்து களித்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்வு இன்று வெறுமனே வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும் மட்டுமே எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம். இதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.