Thursday 8 August 2013

மீளும்மென் முப்பாடன் பாடல்...........!!!

முப்பாட்டனின் பாடலும் அவனுக்கு
முன்னான ஆதிமுந்தையோனின் பாடலும்,
எனக்கு கேட்கிறது.

வேட்டையும் வேட்கையும் 
வேளாண்மையும் போதுமென,
கூடில்லாத கூட்டமாக  நகர்ந்த
ஆதிமுந்தையோனின் நிலாப்பாடலில்...

அடங்காத வீரமும் 
திடங்கொண்ட தோள்களின் தீரமும்
முடங்கிக்கிடக்காத விவேகமும்
தடங்குலையாத வேகமும் கேட்கிறது.

சீரான காலடிகளும் 
குதிரைக் குளம்படி ஓசைகளும்
காற்றை கிழிக்கும் வன்ம பிளிறல்களும்
ஒளிபட்டு தெறிக்கும் வேல் முனைகளும்
குருதி வழிந்து உயரும் வாள்களும்
பொருதி முடித்த களத்தே முனகும்
பேய்களும் நாய்களும் நரிகளும்
தெரிகிறது அடுத்தவன் பாடலில்,

பாடல் கேட்கிறது
மென்மையாக மெல்லியதாக
சம நிலத்தின் பயணிக்கும் காற்றுப்போல.....
பாடல் கேட்கிறது........

பாடல் கேட்கிறது
ஒரே இராகத்தில் வேறு வேறு குரல்களில்
நீளமாகவும் கட்டையாகவும்
பாடல் கேட்கிறது.

அலையோசைகள் கேட்க
துடுப்போசைகளுக்கிடையில்
மீண்டும் தொடர்கிறது  பாடல் உச்சஸ்தாயியில்.
கொற்றவையின் பூரிப்பில்
எல்லைமீறி கேட்கிறது.

விழி மூடிக்கேட்கிறேன் முப்பாட்டன் பாடலை.
விரிகிற கனவில் தெரிகிறது பெரும் களம்
கரவொலிகளும் காதல் கலப்போலிகளும்
உறவுகளின் உணர்வொலிகளும்
பக்திபண்சுமந்த இசையொலிகளும் கேட்கிறது.

உடுக்கையும் பறையும் சிலம்பும் கேட்கிறது
உடல் சிலிர்க்கும் குலவையும் கேட்கிறது
மதங்கொண்ட மார்புகள் மோதுமோலி கேட்கிறது
கொங்கையர்  மோக சிணுங்கள் கேட்கிறது.

கடக்கிறது முப்பாட்டனின்
முந்தையோன் பாடல்

கொஞ்சம் கொஞ்சமாக.....
தொடர்கிறது
என் பாட்டனின் பாடலும் அப்பனின் பாடலும்.
வரலாற்றை மீட்ட
பாட்டனும் அப்பனும் வரலாறாகிப்போக,
பாடல் மட்டும் தொடர்கிறது.

இதோ என் பாடல் கேட்கிறது...........

தலைகுனிந்து தளர்ந்த குரலில்
விலைபோய் இனம்விற்ற குரலில்
இடம் விட்டிடம் மாறி அலைந்த  குரலில்
அழுதும் தொழுதும் விழுந்தும் தளதளத்தகுரலில்
முன்னெப்போதுமில்லா இழி குரலில்கேட்கிறது

என் பாடல்
எனக்கான பாடல்
என் காலத்துக்கான பாடல்
கடந்து போகும்.-நாளை
விடியலின் கீதத்தோடு
என் மகனின் பாடல் வரும்
அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் பாடலை.
ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.

3 comments:

  1. சிந்திக்கவும் சீரழிந்த இனத்தையும் சேர்ந்தே பாடும் கவி அழகு .வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  2. விழி மூடிக்கேட்கிறேன் முப்பாட்டன் பாடலை.
    விரிகிற கனவில் தெரிகிறது பெரும் களம்
    கரவொலிகளும் காதல் கலப்போலிகளும்
    உறவுகளின் உணர்வொலிகளும்
    பக்திபண்சுமந்த இசையொலிகளும் கேட்கிறதுஃஃஃஃஃஃஃஃஃஃஃ

    எங்கள் தலைமுறைப்பாடலும் முப்பாட்டனின் பாடலை ஒத்திருப்பதையே விரும்புகிறோம்.மயிர்மகூச்செறியும்அத்தனைவீரங்களோடும்.!

    ReplyDelete