Monday 23 September 2013

கசியும் வேர்கள்

வேர்களில் கசியும்
நேசிப்பிற்கான  ஏக்கத்தினை
வன்மத்தோடு புறந்தள்ளி
இலைகளையும் மலர்களையும்
வருடிச்செல்லும் இந்த பிரியங்களை
புரிந்துகொள்ள இயலவில்லை.

இப்போதெல்லாம்
வெற்று ஒலிகளால்
ஊதப்படுகிறது பிரியங்கள்
ஒப்பாரிகளையும் ஓலங்களையும்
விதைத்துவிடுவதே அதன்
அதிஉன்னத கற்பிதமாகி போகிறது.

அடைய எதுவுமில்லாத நாளொன்றினை
கடக்கும்  அவலத்துடன்
எதிர்கொள்ள வேண்டியதாகிறது
இன்றைய பிரியங்களை

அவசரத்தில்
துப்பிவிட்ட பிரியங்கள்
படுக்கையெங்கும்  சிதறி கிடக்கிறது.

இனியவை ஒன்றுகூடி
வேட்டைக்கு கிளம்பலாம்

மனதை வருடி மென்மையாக
கொல்லத்தொடங்கலாம்.
நரம்புகளை சீண்டி
வக்கிரங்களை பரப்ப தொடங்கலாம்
கரங்களில் பயணித்து
இணைவுகளை தகர்க்க தொடங்கலாம்
வேர்களில் புகுந்து நேசிப்பினை
வறட்சியடைய வைக்கலாம்

எதுவாக இருந்தாலும்  இந்த
பிரியங்களை சிந்துவோர் மீதும்
எழுந்துவிடுகிறது
புரிந்துகொள்ளவியலாத ஒரு பிரியம்.

1 comment:

  1. உண்மையான பிரியங்கள் மாறுவதில்லை...

    ReplyDelete