Tuesday 5 August 2014

வலி மூலம்...

எதிர்கொள்ளமுடியாத நடுக்கமொன்றை
சிலிர்ப்பால் கடத்தியது
வாசலில் கூடுமுடைந்து அடைந்துகிடந்த தாய்ப்புறா.

வீடும்,
நாளைய தன் குஞ்சுகளும்
நினைவுகளில் நீண்டிருக்கும்...

மரம் தேடி
நிலைகொள்ளுமொரு கிளை பார்த்து
சிறுசுள்ளி வளைத்து,
துணைகூடி வீடமைத்து இயல்பான வாழ்வென்று
இணைபுணர்ந்த நேற்றையை நினைத்திருக்கும்.


துயர் வரமுன்
துணை வருமோ என்று தவித்திருக்கும்

இறகுகோதி
இயல்பாய் இருப்பதாய் நடிக்கலாம்
என்றும் எண்ணமிட்டிருக்கும்.

எல்லாம் கடந்தும்
அதன் நினைவுகளில்,
நான் வளரத்தொடங்கியிருப்பேன்
ஒரு இரைதேடும் பூனையாக
பாம்பாக குறைந்த பட்சம்
ஒரு நாயாகக்கூட...

காலத்தை மீறியொரு பெருங்கனவு
அதன் விழிகளில் நிறைந்து வழியத்தொடங்கியது
நான் மூழ்கத்தொடங்கினேன்.
நினைவுகளைத்தவிர எதுவுமில்லாமல் போன
நிகழ்காலமொன்றில்,

இப்போது,
எப்படியாவது  உணர்த்திவிட வேண்டும் அதற்கு,
நானோர் கூடிழந்த அகதியென்று.

1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete