Tuesday 20 January 2015

அலவாங்கு

   என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் எடுத்த பிரஸ்சை திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு  சரத்தை தூக்கிச்  சண்டிக்கட்டு கட்டினான் சுரேந்தர். சுவரில் பொருத்தப்பட்ட கண்ணாடியை நிமிர்ந்து  பார்த்தவன், கம்பியில் கொழுவி இருந்த துவாயை எடுத்து  கழுத்தால் சுற்றி முதுகை மறைத்துப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு முன்புறம் வந்து  வேப்பம் மரத்தில் சாய்த்துக் கிடந்த கொக்கத் தடியை எடுத்து ஒரு வேப்பம் கோப்பை வெட்டி விழுத்தினான். மொக்கு நீக்கு இல்லாத நேரான குச்சியை முறித்து இலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு  நுனியை வாயில் வைத்து சப்பித் தும்பாக்கிகொண்டு வீட்டின் முகப்பு கேற்றை  நோக்கி நடந்தான்.
 கேற்றின் மேல் கொழுவியை தூக்கி கேற்றை திறந்தபோது  மெல்லிய காற்று கழுத்தில் போட்டிருந்த துவாயை தாண்டி உடலில் மோதியது. இரணைக்கேற்றின் சரிவுப்  பத்திரிப்பில் ஏறியவன்  காலில்  பத்திரிப்பு குத்த அப்படியே கேற்றினைப் பிடித்தபடி நின்றான். "கொஞ்சநேரம் நோகும்.அப்படியே நிண்டால் அது பழகிவிடும்"..  பாரிசில் தமிழ்க் கடையில் வேலை செய்யும் போது குதிக்கால் நோகுது என ஒரு இடத்தில் இருந்தபோது முதலாளி வந்து அவனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்ட சுரேந்தர் நிலம்  சுத்தமாக இருக்கவே அதில் அப்படியே இருந்து கேற்றில் சாய்ந்து கொண்டான்.

 நேரகாலம்  இல்லாமல் எத்தனை பேர் வந்துபோன இடம்.  இந்த வாசலுக்கு வராத ஊர்ப் பொடியள் யாருமே இல்லை. இப்ப இருக்கிற பொடியளையும் தெரியாது. அப்ப இவங்கள் எல்லாம் சின்னப் பொடியளாக இருந்திருப்பாங்கள். முந்தி திரிஞ்சவங்கள் எல்லாம் கலியாணம் கட்டி வேலை வேலை என்று ஓடுப்பட்டு திரிவாங்கள். பெருமூச்சோடு வீட்டை நோக்கினான் சுரேந்தர்.
 
 வீடும் முழுதுமாக மாறிப் போய் இருந்தது.  புது வர்ணம் பூசிக் கிடந்தது. தூண்கள் இரண்டிலும் புதிதாக  ஒரு மஞ்சள் பூக்களைக் கொண்ட கொடி சுற்றிப் படர்ந்து வளர்ந்திருந்தது. அண்மைக்காலங்களில் யாருமே அந்த தூனில் சாய்ந்து இருந்ததற்கான எந்த ஓர் அடையாளங்களும் இல்லை. முன்பெல்லாம் அந்த தூணில்தானே சாய்ந்துகொண்டு முழங்கால் மடித்திருந்து பேன் பார்ப்பார்கள் அக்காவும் கேமாவும். பேன் பார்த்து, அரட்டையெல்லாம் முடிந்து கேமா போனதும், அவள் இருந்த இடத்தில் போய் இருப்பதில்  அளவிடமுடியாத சந்தோசம். அவள் தூணில் சாய்ந்திருந்த இடத்தில் படிந்திருக்கும் எண்ணை வாசம்  ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும்.   அதற்காகவே அவள் போனதும் ஏதாவது ஒரு புத்தகத்துடன் அவள் இருந்த நிலையிலேயே அந்த தூணோடு ஒட்டி இருந்து விடுவதையும் நினைத்தவன், என்ன வாழ்க்கையடா என்று தனக்குத்தானே சொல்லியபடி தூணையே வெறித்துப் பார்த்தான். அவனுக்குள் கேமா வளரத்தொடங்கினாள்.

 மூன்றில் இருந்து மூன்றரை மணிக்குள் கேமா வந்துவிடுவாள். அதற்கு முதலே அப்பாவின் சாய்மனைக் கதிரையில் சாண்டில்யனின் புத்தகத்துடன் இருந்துவிட, "இன்னுமாடா உதய் வாசிச்சு முடிக்கலை" கேட்டுக்கொண்டே உள்ளே வருவாள் கேமா. "இதென்ன ரமணிச்சந்திரன்ர கல்யாணம் சண்டை பிறகு காதல் எண்டு போற கதையே, உடனே வாசிச்சு முடிக்க, இதெல்லாம் அனுபவிச்சு வாசிக்கணும் உங்களுக்கு எங்க விளங்கும்"என்பான் கிளர்ச்சியுடன்.  "ஒ ஒ உதில நல்லா அனுபவிச்சு வாசிக்க நிறையப் பக்கம் பக்கமா இருக்கும் நல்லா வாசி. நல்லா வருவாய்" என்ற குறும்பான பதில்களுடன்  அநேக தினங்களில்  வீட்டினுள் நுழைவாள். அக்காவையும் அழைத்துக்கொண்டு வந்து, வாசல் தூணடியில் முழங்கால் மடித்து இருந்து கூந்தலைக்  குலைத்து விட்டு தலையை இருமுறைகள் மெல்ல ஆட்டிக் கொண்டே, ஊர்க்கதையெல்லாம் கதைக்கத் தொடங்குவார்கள். சிலநேரம் கேமா, அக்காவின் இரு புறங்களாலும் கால்களை நீட்டிக் கொண்டு இருப்பாள். அவளது ஸ்கேட் முழங்காலுடன் வந்து நிற்கும். காலில் நிறைந்திருக்கும் முடிகளையும், கால் விரல்களையும் கடைக் கண்களால் பார்த்துக் கொள்வான். அவர்களோ  ஒருவரை ஒருவர் மெல்ல நுள்ளியும்  காதுக்குள் கதைத்துக்கொண்டும் இருப்பார்கள். எப்பவாவது முற்றத்து மல்லிகையில் இருந்து உதிர்ந்து விழும் சில மலர்கள் கேமாவின் அகன்ற முதுகில் பரவிக்கிடக்கும்  நீண்ட கூந்தலில் தொங்கிவிடும். அந்த அழகினை நெஞ்சு படபடக்க பார்த்துக் கொள்வதும் கால்வனப்பும் நினைவில் வர உடல் சிலிர்த்தது சுரேந்தருக்கு.

 "என்னடா பல்லுத் தீட்டப் போனனி உதில இருக்கிறாய்  தேத்தண்ணி போட்டுட்டன்,  ஏன்ரா உந்த  கதிரையில இரன்" அக்காவின் குரல் கேட்டு திகைத்து நிமிர்ந்தாலும், ஒருமையான அழைப்பில்  எதோ ஒரு சொல்லமுடியாத உணர்வு படிந்து கிடந்தது. எவ்வளவு காலம் இப்படியொரு அழைப்பைக் கேட்டு,"இல்லை அக்கா இப்படி இருக்கிறது சுகமாக இருக்கு. நீங்கள் அதில இருங்கோ எங்க பிள்ளை பள்ளிக்கூடம்  போட்டாளோ?
"ம்ம் அவள் வந்து அறையை எட்டிப் பார்த்தவள் நீ நித்திரை பின்ன அவள் போட்டாள் சரி உனக்கு என்ன சாப்பாடு மத்தியானம்"
"எனக்கு ஒன்றும் வேண்டாம் அக்கா, வயிறு இட்டுமுட்டாக்  கிடக்கிறமாதிரி இருக்கு"
"அத்தானின் சிலமனைக் காணயில்லை எங்க?
"அந்தாள் உதில ஆடு அடிக்கிறாங்களாம் பங்கு வேண்டிவாறன் என்று போட்டார். இண்டைக்கு ஆள் போத்திலோட தான் வருவார்" ம்ம்ம் சரி நீ குளிச்சிட்டு வைரவரிட்ட போட்டு வா. ஐயருக்கும் ஏதும் குடுடா பாவங்கள் எங்களை நம்பித்தானே  இருக்கினம்."

அக்காவைப் பார்த்தான் சுரேந்தர். ஓரிரு முடிகள் நரைத்துக் கொஞ்சம் முகம் தளர்ந்து கண்கள் உள்ளே போய், அம்மாவின் சாயல் நினைவுக்கு வர, இருபதாம் திகதி இவளுந்த நாற்பதாவது  பிறந்தநாள். வடிவாக கொண்டாட வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

"என்னடா என்ர முகத்தைப் பாக்கிறாய்".
இல்லை அக்காள் நீயும் அம்மா மாதிரி கதைக்கிறாய் கோயிலுக்குப் போ ஐயருக்கு குடு என்று... அதுதான் எவ்வளவு காலம் மாறினாலும் உங்கட இயல்புகள் மாறது போல" சிரித்தபடியே கிணற்றடியை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

மாறிப் போயிருந்த சூழலை ஒவ்வொன்றாக அனுபவித்துப் பார்த்துக் கொண்டு கிணற்றடிக்கு வந்தவனுக்கு உடுப்புத் தோய்க்கும் கல் கண்ணில் பட்டது. சுரேந்தர் தன்னை அறியாமல்  நெற்றியைத் தடவிப் பார்த்தான். தளம்பு இன்னும் அப்படியே இருந்தது.  சிரித்துக் கொண்டான். குளித்து முடித்து வீட்டுக்குள் வந்தவனுக்குள் மீண்டும் கேமா  பெரு வடிவுகொண்டு எழுந்து நின்றாள்.

கேமா  இப்ப எப்படி இருப்பாள். பார்த்தால் கதைப்பாளோ இல்லையோ என எண்ணியபடி, தீகனின்  தொலைபேசி இலக்கத்தை எடுத்து அழைத்தான். டேய் அத்து நான் சுரேந்தர். இங்கை வீட்ட வந்திட்டன். பின்நேரம் ஒருக்கா வாறியா..தீகனின் பதிலைத்தொடர்ந்து ஓகே ஓகே நான் வெளிக்கிட்டு நிப்பன் வா.

சுரேந்தர். பத்து வருடங்கள் பாரிசில் இருந்து அங்கிருந்து லண்டனுக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. பதினைந்து வருடங்களாக  தனிமையும் ஒவ்வொரு இடமாக  சுரேந்தர் கூடவே பயணித்தது. பாரிசில் போய் இறங்கியவன், நெற்றியில் கிணற்று உடுப்புத் தோய்க்கும் கல் இடித்து வந்த காயத்தை காட்டி செல்லடியில் பட்ட காயம் என்றும் அம்மா அப்பா எல்லோரும் செத்துவிட்டனர் என்றும் கேஸ் எழுதிப்போட்டு வந்த சிறிது காலத்திலேயே விசாவையும் எடுத்துக் கொண்டான். வழமைபோல  தமிழர்களின் தற்பெருமையும் மோகமும் ஒட்டிக்கொள்ள லண்டனுக்கு குடிபெயர்ந்தான். எப்பவாவது ஊர் நினைவுக்கு வந்தால் போன் எடுப்பான். எப்பவும் காசு கேட்டால் எப்பவாவது அனுப்புவான்.

பாரதி வாசிகசாலையில்  நடந்த இயக்க பிரச்சாரக் கூட்டத்தில் ஒருலட்சம் பேர் வாங்கோ பலாலி ராணுவத்தை  கல்லெறிந்தே கலைக்கலாம் என்று  மேகவண்ணன் முழங்க இவனும் உணர்ச்சிவசப்பட்டு  கையை உயர்த்த, பக்கத்தில இருந்த வேலுப்பிள்ளையார் காதைப் பொத்தி அடிச்சு வீட்ட கொண்டு வந்து அறையிக்கை தள்ளி மனைவி பொன்னம்மாளிடம் ஒரு காட்டுக் கத்தல் கத்திமுடிச்சார். அடுத்தநாள் கொழும்பு. அன்றில் இருந்து மூன்றாம் மாதம் பாரிஸ். ஒருவருக்கும் தெரியாது காதும் காதும் வைச்ச மாதிரி அலுவல் முடிச்சார் வேலுப்பிள்ளை. பெரியம்மா வீட்டுக்கு போகிறேன் என்று போனவன் பாரிசிலிருந்து கடிதம் போட்டான்  நண்பர்களுக்கு.

மச்சான் என்னால முன்னுக்கு இருக்கமுடியாது. நான் கரியரில ஏறுகிறேன் நீ ஓடு. என்றபடியே சுரேந்தர் ஓடி ஏறினான். இப்ப எங்கயடா போக, வாசிகசாலையடிக்குப் போவம் என்ன. வில்லனை வரச்சொன்னான். அதில போய் பிறகு யோசிப்பம் எங்க போறதென்று, என்றபடி சுரேந்தரின் பதிலுக்காக காத்திருக்காமல் சைக்கிளை வாசிகசாலை நோக்கி ஓட்டினான் தீகன். சைக்கிள் ரயர்  "சர்" என ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது. எந்த ஒரு குலுக்கமும் இல்லாமல் சைக்கிள் ஓடியதிலிருந்தே ரோட்டின் அமைப்பினைப்பினைப் புரிந்துகொண்டவன் கல்லுகள் நிறைந்தும், குன்றும் குழியுமாக கிடந்த ரோட்டில் அங்காங்கே தேங்கிக் கிடந்த வெள்ளத்தை விலகி விலகி சைக்கிள் ஒட்டிய நினைவுகள் வர ரோட்டைப் பார்த்தான்.

வாசிகசாலையடி  முழுவதுமாக மாறிக்கிடந்தது. கட்டடம் மட்டும் அப்படியே இருந்தது. வாசிகசாலைக்கு முன்பக்கம் நின்ற நெருப்பு வாகைமரத்தைப்  பார்த்தான். பெருமூச்சோடு அதன் கீழ் இருந்த காலங்களை நினைவுகளில் கடந்தான். திரும்பியவன் வாசிகசாலைக்கு அடுத்தபக்கம் இருந்த கேமாவின் வீட்டைப் பார்க்க நடந்தான். "என்னடா இது" என அதிர்ச்சியுடன் திரும்பினான் தீகனிடம். "ஏன் உனக்கு தெரியாதே உதக் கட்டி இப்ப ஒருவருடத்துக்கு கூட வரும்" சர்வசாதரணமாக சொன்னான் தீகன். ஏன்ரா விட்டனிங்கள் சுரேந்தரின் குரலில் கோபம் தெறிக்க கேட்டான், நாங்கள் எங்க விட்டது அவங்கள் கொண்டுவந்து ஒருநாளில் கட்டிமுடிச்சுட்டு போட்டாங்கள். சந்தியில நிக்குது உந்த மரத்தை தறிப்பம் எண்டு முந்தி வெளிக்கிட நீதான நிழல் மசிர் மட்டை  என்று  மறிச்சனி... . கேலியாகக் கேட்டான் தீகன்.

சுரேந்தர் கேமாவின் வீட்டை மறந்தவனாக அந்த சிலையைப்  பார்த்துக்கொண்டு நின்றான். சுற்றிவர அரை அடி சுவர்களும் ஒரு கையில் சிங்கக்கொடியும் மறுகையில்   துப்பாக்கியையும் பிடித்தபடி முழுவதும் பச்சை நிறத்தில் நான்கு வெள்ளைத்தூண்களுக்கு மத்தியில், மேலே கூரை போடப்பட நிலையில் தாமரைப் பீடமொன்றில் அமைக்கப்பட அந்த சிலை அவனையே பார்ப்பதுபோல இருக்க தலையைக் குனிந்துகொண்டான். எதோ நினைத்தவனாக சிலையின் அருகில் சென்றவன், சிலையின் பீடத்தில் முழு இலங்கையின் படத்தை வரைந்து அதற்குள் சிங்களம் தமிழ் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் எழுதியிருந்ததை வாசிக்கத்தொடங்கினான். "பயங்கரவாதிகளிடம் இருந்து எழில் மிகு இலங்கைத் திருநாட்டை பாதுகாக்கும் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்கள் நினைவாக வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் கௌரவ, திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களால் 18 /05 /2013 அன்று திறந்து வைக்கப்பட்டது"

தளர்ந்த நடையோடு திரும்பி வந்து நெருப்பு வாகை மரத்துக்கு கீழ் அமர்ந்துகொண்டான் சுரேந்தர். முதல் முதல் இந்த இடத்துக்கு எதோ ஒரு கூட்டம் என்று பெரியப்பா ஆறுவயதில் அவனையும் அழைத்து வந்திருந்தார். சுரேந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. பேசியவர்கள் எல்லோரும் ஆவேசமாக பேசினார்கள்.கூடியிருந்த மக்கள் எல்லோரும் கை தட்டி ஆரவாரித்தார்கள். அன்றிலிருந்து பக்கத்து வீட்டு முருகன் மாமா அவர்களுடன் சென்று விட்டார். பிறகு நீண்ட காலத்தின் பின் பெரியப்பாவுடன் கதைக்கும் போதுதான் தெரிந்தது, அந்த கூட்டத்தில கூட்டணி தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள் என்றும், அதில் பேசும் போதுதான் முருகவேல் அப்பா ஈழக் கோரிக்கையை கூட்டணியினரிடம் முன் வைத்தார் என்றும் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.

பிறகும் பல கூட்டங்கள் பல நிகழ்வுகள் நடந்ததும், ஒருமுறை மேகவண்ணன் பேசும் போது கையை உயர்த்த தகப்பன் அடித்து இழுத்துக்கொண்டு போனதும் அதுவே கடைசி முறையாகிப் போனதையும் நினைத்தவன், உந்த வாசிகசாலையை ஒழுங்கா நடத்தவென்று எவ்வளவு பாடுபட்டும் கடைசியில இப்படியாகி விட்டதே இயலாமையோடு சொன்னபடியே தீகன் உதில தண்ணி வேண்டிவாடா என்றான்.

தீகன்  போத்தல் தண்ணி வேண்டிக்கொண்டு வர நிமிர்ந்து பார்த்தவன், எண்டா மனேச்சர் பழக்கமில்லையா போத்தில் தண்ணி வேண்டிவாறாய். 
"இல்லடா நீ சும்மா தண்ணி குடிப்பியோ தெரியாது அதுதான் என்றவனை நிமிர்ந்து பார்த்தான் சுரேந்தர். "நீயொரு... என்றபடி  சங்கக் கடையைப் பார்த்தான். மனேச்சர் அவனை எட்டிப்பார்ப்பது தெரிந்தது.

டேய் என்னடா இது. உதில கட்டியிருக்கிறாங்கள். உனக்குத் தெரியும் தானையடா முந்தி உந்த வாசிகசாலையை எப்படிஎல்லாம் நடத்தினனாங்கள் என்று, எப்படி சம்மதிச்சியள்.  இப்ப இருக்கிற நிர்வாகக்காரங்கள் ஒன்றும் சொல்லவில்லையா..எனக் கேட்டான் சுரேந்தர். நீவேற கட்டியதே நிர்வாகக்காரங்க சொல்லித்தான். இப்ப ஆர் தலைவர் தெரியுமே மணியம் தான். மணியம் வால் பிடிக்க உதயெல்லாம் செய்கிறான். அவன் கள்ளனடா. முந்தி இயக்கம் இருக்ககேக்கை எல்லா அலுவலுக்கும் மணியம் அங்கதான் போவான். அவங்களும் இவனை எதோ பெரிதாக நினைத்துக்கொண்டு  வருவாங்கள் போவாங்கள். அந்த செல்வாக்கில் மணியம் அப்ப இணக்கமன்று தலைவர் அந்த தலைவர் இந்ததலைவர் என்று திரிஞ்சான். அப்பவும் அவன் வாழ்ந்தான் இப்பவும் அவன் தான் வாழுறான். உத விடு. எப்படி சம்மதிச்சனியளோ  ஏதும் கதைத்திருந்தால் உங்கை வாசிகசாலைக்குள் என்ர படமும் மாட்டப்பட்டு கிடக்கும் இப்ப...நீ வந்தனி உன் அலுவலைப் பார்.அங்கை இங்கை என்று ஏதும் பழைய நினைவில திரிஞ்சியோ திருப்ப லண்டனுக்கு போகமாட்டாய். சொல்லிப்போட்டன். பிறகு நாங்களும் இங்கை இருக்கமுடியாது. எப்பவாவது சந்தர்ப்பம் வரும் தான என்று பார்த்துக்கொண்டு இருக்கிறம். இவங்களுக்கு நல்ல சாவே வராதடா.

மௌனமாக சிலகணங்கள் கரைய, சுரேந்தர் கேட்டான்  வில்லன் எங்கையடா. ... ,வருவான் இப்பதான் போன் பண்ணினனான்.  கேமாவைக் கண்டனியே.. எனத் திருப்பக் கேட்டான் தீகன். இல்லையடா  எப்படி அவளைப் பற்றி உன்னிட்ட கேக்கிறது என்று யோசித்துக் கொண்டு இருந்தனான். என்னடா செய்கிறாள் அவள்.  எந் திருப்ப கேட்டான் சுரேந்தர். இருக்கிறாள் உங்கை பாலர் பாடசாலையில் படிப்பிக்கிறாள். தாயோட தான் இருக்கிறாள். என்றவனிடம்   ஏன் இன்னும் அவள் கல்யாணம் கட்டவில்லையாடா .. எனக் கேட்டான். 

இல்லைடா அவள் கடைசியா வன்னியில இருந்தவள் தான. ஆமியிட்ட போகேக்கை ஒரு பிள்ளையை கொண்டு போயிருக்கிறாள். ஆமியும் அவளின் பிள்ளை என பதிந்து பின் அவளை புனர்வாழ்வுக்கு அனுப்பி இருக்கிறாங்கள். அங்கை இவளைப் பார்க்கப் போகேக்கை தாயிடம் பிள்ளையை கொடுத்து இருக்கிறாள் கேமா. அப்பேக்கையும் தாயிடம் தன் பாதுகாப்பு கருதி தன்ர பிள்ளை என்றுதான் சொல்லி இருக்கிறாள் . தாய்மனுசியும்  பிள்ளையை கொண்டுவந்து வளக்கத்தொடங்கிடுத்து. ஊர் சனமெல்லாம் அவளிந்த பிள்ளை என்றுதான் சொல்லிக்கொண்டு திரியுதுகள்.

அவள் தடுப்பால வந்த பிறகுதான் எங்களுக்கு சொன்னாள், தான் சரணடைய வரேக்கை தாயும் தகப்பனும் செல்பட்டு செத்துக் கிடக்க பிள்ளை அழுதுகொண்டு இருந்ததாம். தான் தூக்கிக்கொண்டு வந்தன் என்றும்.  எங்கட சனங்கள் சும்மாவே கதையை கட்டுறதுகள். இப்ப அவள் பிள்ளையோடு இருக்க விடும சனம். வாற கல்யாணங்களை எல்லாம் குழப்பி போடுங்கள் மீறி வந்தாலும் அவள் பிள்ளையை தன்னோடு வளர்ப்பேன் என்று சொல்ல வாறவங்களும் வேண்டாம் என்றுவிட்டு போறாங்கள். அதைவிட புனர்வாழ்வு முடிச்சு வந்த பெட்டை என்று கொஞ்சப்பேர் உடனேயே மாட்டன் என்கிறான்கள். சரியான கஷ்டம் வேற... ம்ம் ம்ம்  வாடா வில்லன் வாறன்.  கோயிலடிக்குப் போவோம்.

நிமிர்ந்து நின்ற சிலையைப் மீண்டும் திரும்ப பார்த்துவிட்டு சைக்கிளில் ஏறியவனை, தொளில் கையை வைத்தபடி சைக்கிளை நெருக்கமாக ஒட்டிக் கொண்டுவந்தான் வில்லன். கேமாவிடம் காதலை சொல்ல அலைந்த போது கூடவே திரிந்தவன் வில்லன். இன்றும் கேமா அப்படியே இருக்கிறாள். வில்லனும் நிக்கிறான். ஆனால் காலம் எவ்வளவு இடைவெளிகளை உருவாக்கிவிட்டது. நினைத்துக்கொண்டவன், வில்லனைப் பார்த்து பழைய அலுவலைக் குடுக்கணும் வில்லா என்றான்.

இரவு சாப்பாட்டு மேசையில் கேமாவைப் பற்றிய கதையை ஆரம்பித்தான் சுரேந்தர். தமக்கையின் கண்களில் ஒரு பொறி கிளம்பி அடங்கியது. அத்தான் மட்டும் மென்மையாக பார்த்தார். பாவம் அந்தப்பிள்ளை என்றுவிட்டு பேசாமல் சாப்பிடத்தொடங்கினார். இவள் இன்னும் கேமாவில கோபமாகவே இருக்கிறாள். எதோ கேமா என்னை விரும்பியது மாதிரி லூசி. நான் தானே அவளை கலைச்சுக்கொண்டு திரிஞ்சனான். இயக்கத்துக்குப் போக வெளிக்கிட்டதுக்கு அவள் தான் காரணம் என்று இவள் போய் சண்டையை பிடித்தவளாம். பாவம் கேமா. என்னதான் நடந்தாலும் நடக்கட்டும். அப்படியே செய்வதுதான் சரி. என நினைத்தபடி சாப்பாட்டை முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றான் சுரேந்தர்.

வெயிலுக்குள் திரிந்த  அலுப்பிலும், கேமாவின் நினைவுகள் தந்த இறுக்கத்திலும்   உறங்கியவனுக்கு  நீண்ட கனவு. லண்டன் வீட்டில் கேமா பிள்ளையை கூட்டிக்கொண்டு பாடசாலைக்கு போகிறாள். பிள்ளை கையை காட்டி பாய் அப்பா  என சொல்லியபடி நடக்க கேமா திரும்பி அவனைப்  பார்த்து சிரிக்கிறாள். திகைத்து எழும்பியவன் நேரத்தைப் பார்த்தான். ஒருமணி. சிலநொடிகள் அப்படியே படுத்திருந்தவன் சுற்றிவரப் பார்த்துவிட்டு எழுந்தான். சுவர் மணிக்கூட்டின் ஒலி மட்டும்  டிக் டிக் டிக் என  கேட்டுக்கொண்டு இருந்தது. எழும்பியவன் நேரே வெங்காயக் கொட்டிலுக்குள் சென்று அலவாங்கை எடுத்தான். திரும்பி வீட்டுக்குள் வந்து சேட்டைப் போடும் போது நிமிர்ந்து பார்த்தான். சுவரில் படமாக மாட்டப்பட்டுக் கிடந்த தந்தையின் கண்களில் இருந்து  வழிந்த புன்னகை அவனைப்பார்த்து மன்னிப்புக் கேட்பது போலவே இருந்தது.  புன்னகைத்தபடி அலவாங்குடன் நடந்தான் வாசிகசாலையை நோக்கி.

நன்றி; ஆக்காட்டி சஞ்சிகை.

No comments:

Post a Comment