Sunday 17 April 2016

இறந்தவன் எனக்கொள்க

காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து
உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி
இறந்தவன் எனக்கொள்க.

ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின்
மறைப்பில் நீளுமெனது  நிவாணம்
காலத்தால் வாழ்ந்தவன்
எனக்கொள்க,

சாத்தியமேயில்லாத
இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த
இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில்
விழிகளை  திறந்து போட்டிருக்கிறேன்.
கபாலத்தைப் பிளப்பது போலொன்றும்
இலகுவாயில்லை
காலத்தைப் பிளப்பது.
பெயரை அழித்துவிடுதலும்
எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும்
ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை.

நேற்று நேற்றாயிருந்தது
இன்று நேற்றாயிருந்தது
நாளையும்  நேற்றாய்த்தானிருக்கும்.
மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது.
ஆணிகளைத் தூர வீசுங்கள்
உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.


1 comment:

  1. விரக்தியின் வலி தெரியும் வரிகள்.....அடித்துத்தான் போகிறது ஆணிகளை...

    ReplyDelete