Friday 31 October 2014

க விதை

உதட்டில் வழுக்கியதைக் கூட்டி
விரல்களில் ஏந்திக்
காற்றில் மிதந்ததில்  ஏத்தினேன்.

மிதந்தது  சுமந்ததன்
நிறைவேறாத கனவோடு
புணரமுயன்றதில்  உருமாறிக்கொண்டது.


மாறியதால் விழுந்திட
மோகங்கொண்ட நட்சத்திரம்
உடன் கட்டை ஏறியது,

துகில் போர்த்தி வானம் அழுதது.

கண்ணீரோடு கலந்து
வேர்களால் நுழைந்து
மலரொன்றில் உறங்கிட விளைகையில்
ஒட்டிக்கொண்ட வாசனையால்
வியாபிக்கத்தொடங்கியது எங்கும்,

யாரோ சிலரின் உரையாடலில்
இதழ்களாய்  பிரிபட இசையாகியது.

இன்னும்,
சிலரின் சினத்துப்பலால்
இறுகி உறைந்துபோனது.

இப்போது உங்களிடம் வந்திருக்கிறது
என்ன செய்யப்போகிறீர்கள்?

1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete